ETV Bharat / state

Nilgiris First woman pilot: விமானம் ஓட்டும் வனமகள்.. படுகர் இனத்தின் முதல் பெண் விமானியின் கதை..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 3:57 PM IST

Updated : Sep 8, 2023, 6:23 PM IST

விடாமுயற்சியை வெற்றியாக்கிய சாதனைப் பெண்ணான நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் சமுதாயத்தைத் சேர்ந்த பெண், அச்சமுதாயத்தை முன் எடுத்து செல்லும் வகையில் முதல் பெண் விமானியாக தேர்வாகி உள்ளார். இத்தகைய சாதனையை விளக்குகிறது இந்த தொகுப்பு.

நீலகிரி படுகர் சமுதாயத்தின் முதல் பெண் விமானி
நீலகிரி படுகர் சமுதாயத்தின் முதல் பெண் விமானி

நீலகிரி: நீலகிரி மண்ணின் மைந்தர்களான படுகர் இன மக்கள், தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் பொதுப் பிரிவு பட்டியலில் உள்ள இவர்கள், தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பலர் கப்பல் படை, ராணுவம் உள்பட பல்வேறு துறைகளில் கால் ஊன்றி வருகின்றனர்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாயத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர், முதல் முறையாக விமானியாக தேர்வு செய்யப்பட்டு தங்கள் சமுதாயத்திற்கு பெருமையைத் தேடிக் குவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மீரா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் இவருடைய மகளான ஜெயஸ்ரீ, தற்போது நீலகிரி படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகி உள்ளார். இவர் தனது பள்ளிப் படிப்பை கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளியில் முடித்ததைத் தொடர்ந்து, பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் (Engineering) முடித்துள்ளார்.

சில காலம் ஐடி துறையில் வேலை பார்த்து வந்த இவர், அதன் பின்னர் விமானியாக ஆக வேண்டும் என்று முடிவு செய்து பைலட் பயிற்சியை முடித்து, தற்போது விமானியாக சேர்ந்துள்ளார். இதற்காக ஜெயஸ்ரீ தென் ஆப்பிரிக்காவில் விமான பயிற்சி எடுத்துக்கொண்டார். இவ்வாறு படுகர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது படிப்பை வெற்றிகரமாக முடித்து, நினைத்த துறையில் நுழைந்திருப்பது படுகர் சமுதாயத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோளாக உள்ளது.

மன உறுதியுடன் இருந்ததாக தனது வெற்றி குறித்து ஜெயஸ்ரீ கூறியதாவது, “தற்போதைய காலகட்டத்தில் எங்களது சமுதாயத்தில் இருந்து அண்டை மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு படிக்க அனுப்பவே தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், மற்றொரு நாட்டுக்கு விமான பயிற்சி பெற தைரியமாக எனது பெற்றோர் என்னை அனுப்பி வைத்தனர். அதேபோல், பெண் குழந்தைக்கு இவ்வளவு செலவு தேவையா? என்று பலர் கேள்வி கேட்டபோதும், பெண் குழந்தைக்கு தான் இவ்வளவு செலவு தேவை என்று என் பெற்றோர்கள் கூறுவார்கள்.

பொதுவாக விமானி என்றால் ஊர் சுற்றும் வேலை என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் வழக்கமான வேலைகளை விட விமான வேலையில் தான் சவால்கள் அதிகம் உள்ளது. மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை, மனநிலை பரிசோதனைகள் நடைபெறும். அதில் தேர்வு பெறவில்லை என்றால் பணியை இழக்க நேரிடும். எனவே உடல் மற்றும் மனநிலையை மிகவும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

மன தைரியம் அதிகளவில் இருக்க வேண்டும். இப்படி ஒரு வேலைக்கு நான் வர காரணம் எனது ஆரம்பகால பள்ளி படிப்பும், அங்கிருந்த ஆசிரியர்களும், என்னுடைய பெற்றோர்களும் தான். நான் எங்கள் சமுதாயம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என அவர் கூறினார்.

பின்னர் அவரது பெற்றோர் கூறுகையில், “சிறுவயது முதலே ஜெயஸ்ரீ -க்கு விமானி ஆக வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. ஆதலால் அவர் பள்ளி, கல்லூரி பயிலும் போது அவருக்கு முடிந்தவரை நாங்கள் உதவி செய்தோம். தற்போது அவர், எங்களது சமுதாயத்தில் முதல் பெண் விமானியாக தேர்வாகி இருப்பது, எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது” எனக் கூறினர்.

இதையும் படிங்க: Senthil Balaji Bail : ஜாமீன் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல்! விரைவில் விசாரணை!

Last Updated : Sep 8, 2023, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.