தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயக்குமார் - கிருஷ்ணவேணி தம்பதி. இவர்களது மகன் வசந்தன். கடந்த ஏழு ஆண்டுகளாக ஜப்பானில் ஆராய்ச்சி கல்வியை முடித்து அங்கேயே பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் அங்கு இருக்கும் போது வசந்தனுக்கு முகநூல் மூலம் அறிமுகமானவர், ஜப்பானைச் சேர்ந்த மேகுமி. இவர் அங்கு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இருவரிடையே இருந்த முகநூல் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இருதரப்பு பெற்றோருடைய சம்மதத்தையும் வசந்தனும், மேகுமியும் பெற்றனர். இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடைபெற்றது.
மணப்பெண்ணின் பெற்றோர் வர இயலாத காரணத்தால், மணமகனின் தாய்மாமன் பெண்ணின் பெற்றோராய் இருந்து சம்பிரதாயங்களை செய்து வைத்தனர். பிறகு அனைவரின் ஆசீர்வாதத்துடனும், ஜப்பானிய பெண்ணுடன் கரம் கோர்த்தார் வசந்தன்.
இத்திருமணத்திற்கு வந்திருந்த மணமகளின் தங்கை, நண்பர்கள், உறவினர்கள், தமிழ் பண்பாட்டின்படி வேஷ்டி, புடவை அணிந்து, மணமகனின் உறவினர்களைக் கை கூப்பி வணக்கம் சொல்லி "வருக, வருக" என அழைத்தது, திருமணத்திற்கு வந்திருந்தவர்களை நெகிழச் செய்தது. இத்திருமணக் காட்சிகளை இணையம் மூலமாக ஜப்பானில் இருந்தபடியே மணப்பெண்ணின் பெற்றோர் கண்டு ஆசீர்வதித்தனர்.