ETV Bharat / state

திருவாரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை; 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 6, 2023, 10:03 PM IST

Rowdy Murdered in Thiruvarur: குடவாசல் அருகே நீதிமன்றத்திற்கு வந்து சென்ற ரவுடியை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை, இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

rowdy murdered in Thiruvarur two special squad police searching five member gang
திருவாரூர் அருகே ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சாவூர்: கும்பகோணம் திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சை என்பவரின் மகன் ஓணான் செந்தில். இவர் தற்போது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதியில் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓணான் செந்தில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காகத் திருவாரூர் நீதிமன்றத்திற்குக் கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அகிலன் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாரதிராஜா ஆகியோருடன் காரில் வந்து விட்டு கும்பகோணம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட நாகலூர் என்கிற இடத்தில் இவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மற்றொரு கார் இவர்களது காரின் பக்கவாட்டில் உரசி உள்ளது. இதில் ஓணான் செந்தில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்கள் குவியலில் முட்டி ஏறி நின்று உள்ளது.

அதைத் தொடர்ந்து காரில் இருந்து ஓணான் செந்தில் இறங்கியவுடன் பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய ஐந்து நபர்கள் ஓணான் செந்திலைச் சரமாரியாகத் தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். இதில் தலை முழுவதுமாக சிதைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த ஓணான் செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் அந்த கும்பல் வழக்கறிஞர் அகிலனையும் கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் காவல் துறையினர் அகிலனை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓணான் செந்தில் உடலை காவல்துறையினர் கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் இரண்டு தனிப்படைகள் அமைத்துத் தப்பி ஓடிய குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, ஓணான் செந்தில் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால் முன் விரோதம் காரணமாகவோ அல்லது பழி வாங்கும் நடவடிக்கையாகவோ யாரேனும் அவரை கொலை செய்துள்ளனரா என்கிற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சமக பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.