தஞ்சாவூர்: கபிஸ்தலம் அருகே திருவைக்காவூர் ஊராட்சி திருவிஜயமங்கை பகுதியில் பாரம்பரியமாக எருமை மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் முருகேசன், மனோகரன், ராஜா ஆகியோர் ஆவர். இவர்களது தோட்டங்களுக்கு சென்று, அவர்களை கௌரவிக்கும் வகையில், ஜோதிமலை இறைபணி கூட்டத்தைச் சேர்ந்த திருவடி குடில் சுவாமிகள், அங்கு வளர்க்கப்பட்டு வரும் எருமை மாடுகளை நேரில் சென்று பார்வையிட்டு சிறப்பு வழிபாடு செய்தார். பின், அந்த எருமை மாடுகளுக்கு உணவளித்தார்.
பின்னர் திருவடி குடில் சுவாமிகள் கூறும் போது, 'பசுக்களை நாம் அனைத்து வீடுகளிலும், அனைத்து கிராமங்களிலும் வளர்த்து வருகின்றோம். ஆனால், எருமை மாடுகளை வளர்ப்பதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை. எருமை மாடுகள் பற்றிய பதிவு சங்க இலக்கியங்களிலேயே இருக்கிறது. எருமை மாடுகளை வெளிநாடுகளில் வளர்க்கின்றனர். எருமை மாடுகளின் பால் மற்றும் சாணங்கள் மிகுந்த அளவில் பயன்பாட்டில் உள்ளன.
ஆனால், இதனை வளர்ப்பதற்கு நாம் முன்வருவதில்லை. பசுக்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை எருமை மாடுகளுக்கும் வழங்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் எருமை மாடுகளை, படித்த இளைஞர்களே வளர்த்து நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, எருமை உற்பத்தியை நாம் பெருக்க வேண்டும். அதற்கு அரசு சரியான ஒத்துழைப்பு வழங்கி எருமை வளர்ப்போருக்கு மானியம் மற்றும் உதவிகள் செய்து தர வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு