ETV Bharat / state

ஏற்கனவே 5 குழந்தைகள்; 6-ஆவதாக பிறந்த குழந்தையை கொன்ற கர்ப்பிணி.. தஞ்சையில் நிகழ்ந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 7:40 PM IST

Updated : Sep 10, 2023, 7:57 PM IST

mother and child death: பட்டுக்கோட்டையில் வறுமையின் காரணமாக தனக்குத்தானே வீட்டில் பிரசவம் பார்த்ததில் தாயும் மற்றும் குழந்தையும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

pregnant lady death
வீட்டிலே பிரசவம் தாயும் மற்றும் சேயும் உயிரிழப்பு

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட சுண்ணாம்புகாரத் தெரு ஆற்றங்கரை பகுதியில் வசித்து வருபவர் செந்தில். இவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (வயது 40) இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் வசந்தி மீண்டும் கர்ப்பம் தரித்தார். ஏற்கனவே 5 குழந்தைகள் இருக்கின்ற நிலையில் தனது கணவரின் வருமானம் போதாது என்ற வறுமை நிலையில் உள்ளதால் மேலும் ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவது முடியாது என்று கருதிய வசந்தி இன்று அதிகாலை பிரசவவலி எடுத்தவுடன் தனக்குத்தானே பிரசவம் பார்த்துவிட்டு உயிருடன் பிறந்த குழந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அதனை வாலியில் வைத்து துணியால் மூடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து பிரசவத்திற்கு பின் வசந்திக்கு ஏற்பட்ட ரத்தப்போக்கு நேரம் செல்லச் செல்ல அதிகரித்த நிலையில் வீட்டில் உள்ளவர்களிடத்தில் வசந்தி தனக்கு மயக்கம் வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்த போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதும், அருகில் ஒரு வாலியில் குழந்தை கொலை செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வசந்தியை பரிசோதித்த டாக்டர்கள் வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே, ஐந்து குழந்தைகள் உள்ள நிலையில் வறுமையின் காரணமாக மேலும் ஒரு குழந்தையை வளர்க்க முடியாது என்று எண்ணி தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையை கொன்று தானும் உயிரை விட்ட பெண்ணின் இறப்பு சம்பவம் பட்டுக்கோட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

Last Updated :Sep 10, 2023, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.