ETV Bharat / state

விறுவிறு வேகத்தில் தஞ்சாவூர் மினி டைடல் பார்க் பணிகள்..! ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் -அமைச்சர் அன்பில் மகேஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 17, 2023, 7:20 PM IST

Minister Anbil Mahesh said Thanjavur Mini Tidel Park will be opened in January
மினி டைடல் பார்க் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்

Thanjavur Mini Tidel Park: தஞ்சாவூரில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் ஜனவரி மாதம் இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் எனவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரும் இடமாக இது அமையும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மினி டைடல் பார்க் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்

தஞ்சாவூர்: உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதன் முன்னோட்டமான கருத்தரங்கம் மத்திய அரசின் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனம் (NIFTEM-T) இன்று (டிச.17) தஞ்சாவூரில் நடத்தியது.

மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இக்கருத்தரங்கில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தொழில் வணிக நிறுவன சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு கருத்துக்களைக் கூறினர்.

மேலும், தொழில் நிறுவனங்கள் தொடங்கவும், தொய்வின்றி நடத்துவதற்கு அரசின் நடைமுறைகள், அரசு தரும் ஆதரவுகள், தொழில்நுட்ப நிதி மேலாண்மை மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து உரிய ஆளுமைகள்,வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் உரை நிகழ்த்தினர்.

இதில், தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர்கள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், ஆலோசகர்கள், கல்வி நிறுவன வழிகாட்டிகள், சுய தொழில் ஊக்குவிப்பாளர்கள், ஆர்வமுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் ரூ.27 கோடியே 13 லட்சம் மதிப்பில் சுமார் 3.40 ஏக்கர் பரப்பளவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “தஞ்சை மாவட்டத்தில் 55 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் மினி டைடல் பார்க் கட்டுமான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஜனவரி மாத இறுதிக்குள் பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

மேலும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரும் வகையில் நல்ல இடமாக இது அமையும். மேலும், வருங்காலங்களில் புதிய நிறுவனங்கள் வரும்போது தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த டைடல் பார்க் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும். மழைக்காலங்களில் தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைப் பொருத்தவரை பேரிடர் மீட்பு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டு, அனைத்து துறை உயர் அதிகாரிகளும் அதில் ஈடுபட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்பி கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநரும், முதலமைச்சரும் கோவைக்கு ஒரே விமானத்தில் நாளை (டிச.18) பயணம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.