தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் தமிழுக்கென்று அமைக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தராக பாஸ்கரன் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2017- 18ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் பணி நியமனம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டு எழுந்தது.
பணி நியமனத்திற்கு ரூ. 40 லட்சம் முதல் பல லட்சம் வரை தொகை பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டதாகப் புகார் கூறப்படுகிறது. இதனையடுத்து பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணையும் நடைபெற்று வந்தது. மேலும், இந்த முறைகேடு குறித்து கவர்னர் அலுவலக உத்தரவின் பேரில் தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மூன்று பேர் கொண்ட குழு விசாரணையில் இறங்கினர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் குமரகுரு, காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் பத்மநாப பிள்ளை, Local Fund Audit Department இணை இயக்குனர் (ஓய்வு) வீரபாண்டியன், ஆகிய குழுவினர் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 12 பேராசிரியர்கள், 13 இணை பேராசிரியர்கள், மற்றும் 9 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 34 பேரிடம் விசாரணை செய்து, அதனுடைய விசாரணை அறிக்கையை கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையின் பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பொதுநல வழக்கு தொடர்ந்துள்ள தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் நெடுஞ்செழியன் கூறும்போது, “2017-18ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 40 நபர்கள் பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அது தொடர்பான expert கமிட்டி விசாரணை நடைபெற்று, அதன் பேரில் தமிழக கவர்னர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த நியமனம் மூலம் வருடத்திற்கு பேராசிரியர்கள் சம்பளம் மூலம் ரூ.6 கோடி செலவிடப்பட்டு, கடந்த 5 ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிதி இழப்பை முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரனிடம் வசூலிக்க வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஹிஜாவு நிதி நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள்?: உடனே புகார் அளிங்க!