ETV Bharat / state

தஞ்சையில் களைகட்டிய 75ஆம் ஆண்டு காவிரிப் பொங்கல் திருவிழா!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 1:59 PM IST

இராஜேந்திரன் படித்துறையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 75 ஆவது காவிரிப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

75th Year Cauvery Pongal Vizhaa at Rajendran Padiththura
காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 75 ஆவது காவிரி பொங்கல் விழா

காவிரி அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 75 ஆவது காவிரி பொங்கல் விழா

தஞ்சாவூர்: கும்பகோணம் காவிரிக் கரையின் இராஜேந்திரன் படித்துறையில் உள்ள காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழமையானது. இக்கோயில் நிர்வாக குழு சார்பில் சோழமண்டல செழுமைக்கும், தெய்வ பக்திக்கும் காரணமாக திகழும் அன்னை காவிரிக்கு, நன்றி தெரிவித்து வழிபடும் காவிரி பொங்கல் விழா கடந்த 74 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

தற்போது 75 ஆம் ஆண்டாக காவிரிப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கடங்களில் புனித நீர் நிரப்பி கடஸ்தாபனம் செய்து சிறப்பு யாகம் வளர்த்து மகா பூர்ணாஹுதியும், அதனையடுத்து மகா தீபாராதனையும் செய்து நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பட்டு காவிரி நதிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காவிரி அன்னைக்கு பஞ்சார்த்தி காண்பிக்கப்பட்டது. பின்னர், காவிரி நதியில் மாநகராட்சி துணை மேயர் தமிழழகன் மற்றும் அவரது மனைவி ஆனந்தி தமிழழகன் ஆகியோர் தீபத்தை மிதக்க விட்டனர். இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் உள்பட திரளானோர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு காவிரி அன்னையை வணங்கி வழிபட்டனர்.

முன்னதாக நடைபெற்ற விசேஷ குத்துவிளக்கு பூஜையில் ஏராளமான கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப மேன்மைக்காகவும், தங்களது வேண்டுதல்களை காவிரி அன்னை விரைந்து நிறைவேற்றிட வேண்டியும், திருவிளக்கிற்கு வஸ்திரம் சாற்றி சந்தன குங்குமப் பொட்டு இட்டனர்.

அதுமட்டுமின்றி மலர்சரம் சாற்றி, நல்லெண்ணெய் இட்டு, பஞ்சுநூல் திரி கொண்டு பஞ்சமுக தீபம் ஏற்றி, தேங்காய், பூ, பழம், வெற்றிலை, சீவல் மற்றும் தாலிக் கயிறு, மஞ்சள், குங்குமம் என மங்கள பொருட்கள் மற்றும் சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் கொண்டும், நாதஸ்வர மேள தாள மங்கள வாத்தியங்கள் முழங்க, மந்திரங்கள் ஓத அதற்கேற்ப குங்குமம், உதிரி மலர்களை கொண்டு திருவிளக்கின் பாதப்பகுதியில் அர்ச்சனை செய்தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவாக திருவிளக்கிற்கு மங்கள ஆர்த்தி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: Onam Festival : விழாக் கோலம் பூண்ட தோவாளை பூ மார்க்கெட்.. விடிய விடிய குவிந்த பொதுமக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.