தென்காசி: தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகள் அடங்கிய மனுக்களைக் கொடுத்த நிலையில், செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட புதூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பூலாங்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் வருகை தந்து புகார் ஒன்றை அளித்தனர்.
அந்த புகாரில், புதூர் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட பூலாங்குடியிருப்பு பகுதியில், பொது மக்களுக்குத் தேவையான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், குடிநீர் குழாய்கள் கேட்டு பல முறை விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காத புதூர் பேரூராட்சி நிர்வாகம், அதே பகுதியில் முக்கிய முக்கிய நபர்களுக்குமட்டும் இணைப்பை கொடுத்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தனர்.
மேலும், வாரத்திற்கு 5 குடம் தண்ணீர் மட்டும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாகவும், இதனால் அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், தென்காசி மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளான கடையநல்லூர், சங்கரன்கோவில், புளியங்குடி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே குடிதண்ணீர் கிடைக்கப் பெறுகின்றது. இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மேலும் சேர்ந்த மரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு வாரத்திற்கு அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிதண்ணீர் கிடைக்கப்படுகிறது. இதே போல் ஒரு சில கிராமப் பகுதிகளில் இந்த குடிநீர் கூட கிடைக்காமல் மக்கள் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தென்காசி மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் குடிநீரின் தட்டுப்பாடு அதிகமாகக் காணப்படுகிறது. எனவே இதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இந்த பிரச்சினையைச் சரி செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூலாங்குடி குடியிருப்பு பகுதியில் இருக்கக்கூடிய பொதுமக்கள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறி காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்ததைத் தொடர்ந்து, புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர், இது தொடர்பாகப் பேரூராட்சி உதவி இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
அதற்குப் பின்னர் காலி குடங்களுடன் வந்த பெண்கள் கலைந்து சென்றனர். இதேபோல் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தேவையான தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி சான்றிதழ் கேட்டு ஆட்சியர் அலுவலகம் முற்றுகை: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்கள்!