ETV Bharat / state

தென்காசியில் மீண்டும் வெறிநாய்களின் அட்டகாசம்.. பத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. நாய்களை மடக்கி பிடித்த நகராட்சி நிர்வாகம்..

author img

By

Published : Aug 7, 2023, 1:31 PM IST

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் நீண்ட நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த வெறிநாய்கள் இன்று பத்துக்கும் மேற்பட்டோரை கடித்ததைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டது.

புளியங்குடி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்
புளியங்குடி பகுதியில் பத்துக்கும் மேற்பட்டோரை கடித்த வெறிநாய்

தென்காசி: புளியங்குடி மேற்கு பகுதியில் காலை பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல் இன்று (ஆகஸ்ட் 7) காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது, அந்த வழியாக வந்த ஒரு வெறிநாய் நடைப்பயிற்சியில் ஈடுபட்டவர்களை சரமாரியாக கடித்துக் குதறியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனைதொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பத்து பேரும் தற்போது புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் துப்புரவு பணியாளர் ஒருவரும் அடக்கம். புளியங்குடி பகுதியில் தொடர்ந்து மக்களை வெறிநாய்கள் அச்சுறுத்தி வருவதாகவும், அவைகளை பிடித்து மாற்று இடத்தில் கொண்டுபோய் விடக்கோரியும் பலமுறை பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தும், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கில் இருந்து வந்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

அதேபோல் கடந்து சில தினங்களுக்கு முன்பதாக சங்கரன்கோவில் பகுதியில் வெறிநாய் கடித்ததில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து குருக்கள்பட்டி அரசு மருத்துவமனையிலும், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து நாயை பிடிக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராமல் இருக்கவும் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரிதும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் பலமுறை கோரிக்கை விடுத்தும் சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகமும், குருக்கள்பட்டி மற்றும் அதனுடைய பஞ்சாயத்து நிர்வாகமும் சம்பவம் தொடர்பான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே பொதுமக்கள் இத்தகைய நிலை வேதனை அளிப்பதாக தெரிவித்து வந்தனர். அதன் பின் தற்போதைய நடவடிக்கையாக, யாரும் வெளியே வர வேண்டாம் என வாகனத்தின் மூலமாக மட்டும் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

வெறிநாயை பிடிப்பதற்காக முறையான நடவடிக்கைகள் புளியங்குடி பகுதிகளில் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது மேலும் 10 பேருக்கு வெறிநாய்கள் கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் அப்பகுதி பொதுமக்கள் வெறிநாயை உடனடியாக பிடிக்க வேண்டும் என புளியங்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

வெறி நாய் கடித்து பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் கோரிக்கைக்கு செவி சாய்த்த நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுடன் இணைந்து நாயை தற்போது பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து இதுபோல் சம்பவம் மீண்டும் அப்பகுதியில் தொடராமல் இருக்க, நகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதையும் படிங்க: குடிபோதையில் தமிழக தோட்ட தொழிலாளர்களை தாக்கிய மர்ம நபர்கள்.. போலீசார் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.