வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கனமழை பெய்துவருகிறது. இதனால் கடந்த சில தினங்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழை பெய்துவருகிறது. நேற்றிரவு பெய்த கனமழையால் இன்று நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
இதேபோல் சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிப்படைந்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இது குறித்து அவர்கள், 'தேசிய நெடுஞ்சாலையின் வடிகால்கள் சரிவர பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேறாமல் சாலையிலேயே தங்கிவிடுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்வதில்லை' என்றனர்.
தகவலறிந்து அங்குவிரைந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனே மாநராட்சி ஊழியர்களை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால்களின் அடைப்புகளைச் சரி செய்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: ராசிபுரம் அருகே கனமழையால் பாலம் உடைந்து போக்குவரத்து பாதிப்பு