ETV Bharat / state

Minister Sekar Babu: சனாதனத்தை எதிர்ப்பது ஏன் - அமைச்சர் சேகர் பாபுவின் விளக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 4:26 PM IST

Minister Sekar Babu commented on Sanatnam
சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளை தான் எதிர்கிறோம் - சேகர் பாபு

திமுக அரசு, சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை, குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சனாதன கோட்பாடுகளை தான் எதிர்கிறோம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சேலம்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று (செப் 14) காலை சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நீண்ட நாட்களாகத் திருப்பணி நடைபெறாமல் உள்ள திருக்கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றது.

இதுபோல பல்வேறு கோவில்களில் நின்று போயிருந்த தேரோட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2016 ஆம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டில் 90% பணிகள் நடைபெற்றுள்ளது. அக்டோபர் மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும்.

மேலும், இந்து சமய அறநிலை துறை சார்பில் ரூ.5213 கோடி மதிப்புடைய ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1144 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோயில்களுக்குத் தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளது." என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 38 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தான் எட்டு பேர் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம் குமரகிரி கோயில் சென்றாய பெருமாள் கோவில்கள் திருப்பணியை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த முறை நேரடியாகக் கள ஆய்வு செய்து திருப்பணிகள் முடிக்கப்படும். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் படிப்படியாகக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும்.

இந்து கோவில்கள் மன்னராட்சியில் ஏற்படுத்தப்பட்டவை. இந்து கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்கள் அவர்களின் சொந்த நிதியில் கட்டப்பட்டது. அதனால் அவர்கள் கோவில்கள் அவர்கள் நிர்வகிப்பார்கள். நிர்வாக சீர்கேடுகள் ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

மேலும், "சனாதனத்தைப் பொறுத்தவரையில் திமுக அரசு, சனாதனத்தை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்க்கவில்லை, குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சனாதன கோட்பாடுகளை தான் எதிர்கிறோம். இந்து மதத்தைத் தமிழக முதல்வர் எந்த இடத்திலும் குற்றம் சொல்லவில்லை, இறை நம்பிக்கையை எதிர்த்து எங்கும் பேசவில்லை.சமத்துவத்தின் ஓர் அங்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்த ஆட்சி சமத்துவ ஆட்சி சமத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதனை வலியுறுத்தும் கடமையும் உறுதியும் திமுக அரசின் அமைச்சர்களுக்கு எப்போதும் உள்ளது" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு கருத்து.. ஆன்மீக பேச்சாளர் ஆர்பிவிஎஸ் மணியன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.