ETV Bharat / state

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி - கராத்தே மாஸ்டர் கைது

author img

By

Published : Nov 28, 2021, 1:40 PM IST

சேலம் அருகே தனியார் பள்ளி மாணவிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்த அதே பள்ளியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கராத்தே மாஸ்டர் கைது
கராத்தே மாஸ்டர் கைது

சேலம்: சேலம் அருகே தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு அதே பள்ளியைச் சேர்ந்த கராத்தே மாஸ்டர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். இது குறித்து மாணவி, பள்ளி தாளாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மாணவி நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வாழப்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துசாமி தலைமையில் காவல் துறையினர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த ஊர் மக்கள், கராத்தே மாஸ்டரை தேடிப்பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதையடுத்து கருமந்துறை காவல் துறையினர் கராத்தே மாஸ்டரை மீட்டு கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவியின் ஊர் மக்கள் கூறுகையில், "கராத்தே மாஸ்டருக்கு பள்ளி நிர்வாகம் துணையாக இருப்பதோடு அரசியல் பலமும் உள்ளது. அவரை காவல் துறையினர் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இவரால் மற்ற மாணவிகள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று கூறினர்.

இதையும் படிங்க: சூரப்பா வழக்கு: முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழ்நாடு அரசு வாதம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.