ETV Bharat / state

கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோர்... மெத்தனத்தில் போலீசார்!

author img

By

Published : May 17, 2023, 2:42 PM IST

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை.. போலீசார் மெத்தனத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கல்வராயன் மலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை.. போலீசார் மெத்தனத்தில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வருவது தொடர்பான வீடியோ

சேலம்: விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ சாராயம் அருந்தியதில், இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த மணிவிழுந்தான் புதூரில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட லாரி டியூப்களில் பதுக்கப்பட்டு இருந்த கள்ளச்சாராய பாக்கெட்டுகளை மதுவிலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்தனர். மேலும், சேலம் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கை மற்றும் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாவட்டம் கல்வராயன் மலைத்தொடர் பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கு இருந்து லாரி டியூப்கள் மூலம் கடத்தி வரப்பட்டு, ஆத்தூர் மற்றும் தலைவாசல் சுற்று வட்டாரப் பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக காவல் துறையினரிடம் வீடியோ ஆதாரங்கள் உடன் பொதுமக்கள் புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, கள்ளச்சாராயத்தை ஒழிக்க ஆத்தூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட கல்வராயன் மலை அடிவாரப் பகுதியில் தற்காலிக சோதனைச் சாவடி மற்றும் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரிக்கரையில் அதிகாலை முதலே கள்ளச்சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்து வரும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

சாராய பாக்கெட்டுகளை வாங்க அதிகாலை முதலே பலரும் குவிந்துள்ளனர். கள்ளச்சாராய பாக்கெட்டுகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுவதால் கூலித் தொழிலாளர்கள், மது போதைக்கு அடிமையாகி வேலை இழந்து வருவது வாடிக்கையாகி வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சாராய விற்பனை குறித்து அப்பகுதி மக்கள் சட்டம் - ஒழுங்கு மற்றும் மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தும், காவல் துறையினர் சாராய கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவாய் ஈட்டுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்‌. எனவே, மாவட்ட நிர்வாகமும், காவல் துறை உயர் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சாராய விற்பனையைத் தடுத்து சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் காவல் துறையினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, வீரகனூர் ஏரிக்கரை பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முன்னதாக, விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விழுப்புரம் கள்ளச்சாராய விவகாரம் - திமுக கவுன்சிலரின் கணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.