ETV Bharat / state

அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும் - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jun 26, 2023, 8:29 AM IST

திமுக அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும் என்று எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்தார்.

அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும்
அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும்

அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளால் விரைவில் திமுக அரசு கவிழும்

சேலம் தாரமங்கலம் அடுத்த அமரகுந்தி பகுதியில் பாமக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்டப் பல அமைப்புகளில் இருந்து 3500 பேர் அதிமுகவில் நேற்று (ஜூன் 25) அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்தனர். இதற்கான விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், "நாட்டு மக்களுக்கு நல்லது செய்யும் கட்சி அதிமுக ஒன்று தான். புரட்சித் தலைவரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி, அதிமுக. அம்மா அவர்கள் கண் இமையைக் காப்பது போல கட்சியைக் காத்தார். அம்மா மறைவிற்குப் பிறகு, எவ்வளவோ பிரச்னைகளை உருவாக்கினர். அதிமுக மூன்றாகப் போய்விட்டது.

இனி, அந்த கட்சிக்கு தமிழகத்தில் இடமில்லை என்றெல்லாம் கூக்குரலிட்டனர். ஆனால், அதிமுகவின் சார்பாக 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்கள். கட்சியில் சில எட்டப்பர்கள் இருந்ததால், ஆளும் தகுதியைப் பெற முடியவில்லை. அவர்களும் இன்று வெளியேறி விட்டனர். சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது.

அதிமுகவை அழிப்பதற்கு உடைப்பதற்கு, முடக்குவதற்கு இன்றைய முதலமைச்சர் எவ்வளவோ முயற்சி செய்தார். இப்போது உங்களது துணையோடு அவரின் முயற்சி முறியடிக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவை எந்த கொம்பனாலும் இனி அசைக்க முடியாது. முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு மூன்று முறை வந்திருப்பார் என கருதுகிறேன். அவர் தனது இரண்டு ஆண்டு ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்திற்கு என்ன செய்தார்? நாங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார்.

யார் பெற்றெடுத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது. மேச்சேரி சாலைக்கு அவர் பெயர் வைக்கிறார். இந்தத் திட்டம் நாங்கள் கொண்டு வந்தது. சட்டக்கல்லூரி திட்டம் நாங்கள் கொண்டு வந்தோம். அப்போது சட்டக்கல்லூரி தொடங்கிவிட்டது. அந்த கட்டடத்தையும் இப்போது திறந்து வைத்திருக்கிறார். இந்தப் பகுதி வறண்ட பகுதி. நூறு வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப விவசாயிகள் கேட்டனர். இதற்கு ரூபாய் 562 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

முதற்கட்டமாக ஆறு, ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பி விவசாயிகள் வயிற்றில் பால் வார்த்தோம். ஆனால், இந்தத் திட்டம் இப்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடலில் கலக்கும் தண்ணீரை 100 ஏரிகளுக்கு திருப்பி விவசாயம் செழிக்க, இந்தத் திட்டம் கொண்டு வந்தோம். இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால், அனைவரும் பெருந்தன்மையோடு பாராட்டி இருப்பார்கள். எப்போது இந்த ஆட்சி முடியும் என பொதுமக்கள் எண்ணுகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் தான் பல துறைகளில் தேசிய விருது பெற்றோம். உள்ளாட்சித் துறையில் 140 தேசிய விருதுகள் பெற்றோம். இது அதிமுகவின் சாதனை. திமுக ஆட்சியில் இந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பேருந்து கூட வாங்க முடியவில்லை. எல்லாத் துறையும் சீரழிந்து விட்டது. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தோம். ஒரு மருத்துவ கல்லூரியாவது உங்களால் கொண்டு வர முடிந்ததா?'' என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர், '' நான் வெளிநாடு சென்று கலப்பின ஆடுகள், மாடுகள் உருவாக்க ஆராய்ச்சி நிலையம் இங்கு கொண்டு வந்தோம். ஆனால், ஸ்டாலின் குடும்பத்துடன் சுற்றுலா போல வெளிநாடு சென்று வந்துள்ளார். வெளிநாட்டில் இருந்து என்ன திட்டம் கொண்டு வந்தீர்கள்? நாங்கள் தொழில் முதலீட்டு மாநாடு நடத்தினோம். நாங்கள் அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கொண்டு வந்தது தான் இப்போது வரும் புதிய தொழிற்சாலைகளுக்கு வழி வகுத்துள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் பேசிய பேச்சு ஆடியோ வெளியானது. பொதுமக்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சியினர் சொல்லவில்லை. அவர்களது அமைச்சரவையில் இருந்தவர் கூறி இருந்தார். இப்போது இரண்டாவது ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் மூன்றாவது ஆடியோ வரப்போகிறது என பேசிக் கொள்கிறார்கள். செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரைப் பார்த்து வந்த முதலமைச்சர், ’என்னை தொட்டுப்பார். சீண்டி பார்’ எனக் கூறி உள்ளார்.

ஒரு அமைச்சர் நீதிமன்றத்தின் மூலம் விசாரிக்கப்பட வேண்டும். போக்குவரத்து அமைச்சராக இருந்த போது பல்வேறு குற்றச்சாட்டுகளின்போது இப்போது உள்ள முதலமைச்சர் கரூரில் பேசும் போது, லஞ்சம் வாங்கி பதவி பெற்றிருக்கிறார். அவர் பதவி விலக வேண்டும் எனப் பேசி இருந்தார். ஆனால், இப்போது என்ன பேசுகிறார்.

பழி வாங்குகிறார்கள், பழி வாங்குகிறார்கள் என ஸ்டாலின் கூறுகிறார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது நீங்கள் பேசியது தானே. அந்தப் புகாரின் பேரில் தான் அமலாக்கத் துறையினர் விசாரிக்கிறார்கள். முதலமைச்சர் வேண்டுமென்றே திட்டமிட்டு நாடகத்தை நடத்துகிறார். செந்தில் பாலாஜி ஊழல் வாதி. கைதியாக இருப்பவர் அமைச்சராக இருக்க முடியுமா? செந்தில் பாலாஜிக்கு கைதி நம்பர் கொடுக்கப்பட்டு விட்டது. கைதி அமைச்சராக இருக்கக் கூடாது என்பதால் ஆளுநரை சந்தித்து மனுவும் கொடுத்து விட்டோம்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே மோசமான ஆட்சி நடக்கிறது. ஆனால், முதலமைச்சர் வளர்ச்சி அடைந்து உள்ளது எனக் கூறுகிறார். ஊழலில் மட்டுமே வளர்ச்சி அடைந்திருக்கிறது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி. தொண்டனும் முதலமைச்சராக முடியும். இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எம்எல்ஏ ஆகலாம், எம்.பி.யாகலாம், ஜனாதிபதி ஆகலாம்.

உங்கள் ஆட்சி தானாக கவிழப் போகிறது. முதலமைச்சர் ஸ்டாலினால் இங்கேயே ஆட்சி நடத்த முடியவில்லை. அவர் பாரதப் பிரதமரையே தேர்ந்தெடுப்பாராம். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்களைத் தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்து திமுகவினரை வீட்டிற்கு அனுப்புங்கள். தற்போது திமுக கூட்டணியில் 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்னைக்கு பேசினார்களா... விவசாயிகள் பிரச்னைக்குப் பேசினார்களா... நாடாளுமன்றத்தை ஒரு நாள் உங்களால் ஒத்திவைக்க முடியுமா? 38 பேர் வெற்றி பெற்று பெஞ்ச்சை தேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இங்கு 3500 பேர் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று பேசினார்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? - எடப்பாடி பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.