ETV Bharat / state

கொடநாடு வழக்கு: "தனபால் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார்... அவர் பிறழ்சாட்சி.." இளங்கோவன் புகார்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2023, 2:22 PM IST

Kodanad case
கொடநாடு வழக்கு

Kodanad case: கொடநாடு வழக்கில் தன்மீது பொய்யான தகவலைப் பரப்பி வரும் கனகராஜின் சகோதரர் தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மனு அளித்துள்ளார்.

கொடநாடு கொலை வழக்கு - இளங்கோவன் பேட்டி!

சேலம்: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தன்மீது பொய் குற்றம் சுமத்தும் தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன் கூறுகையில், "கொடநாடு கொள்ளை வழக்கு தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனபால் என்மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகிறார். எனவே அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் என்னிடம் பைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது.

கனகராஜ் விபத்தில் உயிரிழந்தபோது ஆத்தூரில் பேட்டியளித்த தனபால், என்னைப் பற்றி எதுவும் கூறவில்லை. மேலும் கொடநாடு வழக்கில் எந்த பொருளும் கொள்ளை அடிக்கப்படவில்லை. எனது சகோதரர் கனகராஜுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறி இருந்தார். ஆனால் தற்போது திமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனபாலிடம் தவறான தகவலைச் சொல்லி, அவர்கள் தூண்டுதலின் பேரில் என்மீது பொய்யான தகவலை ஊடகம் வாயிலாக கூறி வருகிறார்.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கொடநாடு வழக்கு தொடர்பாக கனகராஜ் சகோதரர் தனபால் ஊட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து சிறையில் அடைத்தனர். பின்னர் தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே என்னை விடுதலை செய்யுங்கள் என்று ஜாமீன் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதனைப் படித்துப் பார்த்த நீதிபதி ஜாமின் மனு மீதான விசாரணை நடத்தி பிணை வழங்கினார். மனநலம் பாதிக்கப்பட்ட தனபால் தற்போது தான் பை கொடுத்ததாகவும் கூறுகிறார்.

அவருக்கு மனநலம் சரியில்லை, இன்று என்னைக் கூறியவர் நாளை உங்களிடம் பை கொடுத்ததாகக் கூறுவார். மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொன்று கூறுவார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி செந்தாமரைச்செல்வி கூட தனது கணவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. அவரால் எங்கள் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு இல்லை, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பாக நில அபகரிப்பு வழக்கில் தனபால் கைது செய்யப்பட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தனபாலுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்களும் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பெயரில், மனநலம் பாதிக்கப்பட்ட தனபால், தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.

எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன். இதற்கு முன்பாக கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், தனது சகோதரர் கனகராஜ் தலையிடவில்லை, அங்கு வேலைக்குச் சென்று 4 - 5 ஆண்டுகள் ஆகிறது என்றும் அப்போது அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். தற்போது கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அது குறித்து கருத்துக்களைத் தன்னால் கூற முடியாது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பூண்டி மாதா பேராலய பெருவிழா! மல்லிகை பூ அலங்காரத்தில் ஜொலித்த மாதா! வாண வேடிக்கையுடன் கோலாகலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.