ETV Bharat / state

பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை

author img

By

Published : Sep 2, 2020, 4:26 AM IST

புதுக்கோட்டை: தொழிலாளர்களுக்கான நோய்த்தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர்

புதுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய்த்தடுப்பு பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலுக்கிணங்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பை பெருக்கவும், அனைத்து தொழிற்சாலைகளும் 100 சதவீத பணயாளர்களுடன் இயங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இதேபோன்று ஒவ்வொரு துறைகளின் சார்பில் அரசு அனுமதித்துள்ள நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து அந்தந்த துறைகளின் அலுவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றையதினம் புதுக்கோட்டை சிப்காட் தொழிற்சாலைகளில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள நோய்த்தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சிப்காட் தொழில்வளாகத்தில் 72 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிறுவனத்திலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இத்தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் உரிய நோய்த்தடுப்பு பாதுகாப்பு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நிறுவனங்களின் சார்பில் முகக்கவசம் வழங்குதல், கையுறை வழங்குதல், கைக்கழுவும் அமைப்பு ஏற்படுத்துதல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் நாள்தோறும் 64 காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டும், இதில் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களுக்கு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற முகாம்கள் சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரிபவர்களுக்கும் நடத்தப்பட்டு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.

குறிப்பாக மழைக்காலங்களில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி தொழிற்சாலை பகுதிகளில் டயர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்களில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுபோன்று 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்க வேண்டும். இதுகுறித்து அலுவலர்கள் மூலம் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.