ETV Bharat / state

உள்பாவாடையுடன் அடித்து துரத்தினர் - புதுக்கோட்டையில் மீண்டுமொரு வன்கொடுமை

author img

By

Published : Jan 9, 2023, 8:43 PM IST

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இனப் பெண்கள், 'குளத்தில் குளித்தபோது ஆதிக்க சாதியினரால் தாங்கள் அடித்து விரட்டியடிக்கப்பட்டதாகவும்; இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

உள்பாவாடையுடன் அடித்து துரத்தினர் - புதுக்கோட்டையில் மீண்டுமொரு வன்கொடுமை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் சமுதாயப் பெண்கள், தங்களுக்கு இழைக்கப்பட்ட சாதிய கொடுமை' குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இன்று (09.01.2023) புகார் அளித்துள்ளனர்.

கூத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த 3 பெண்கள் நாகுடி காவல்நிலையத்தில் கடந்த ஜன.2 ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், பெருங்காடு ஊராட்சிக்குட்பட்ட வைராண்டி கண்மாயில் 3 பேரும் புத்தாண்டு அன்று குளித்து கொண்டிருந்ததாகவும். அங்கு வந்த ஐயப்பன் மற்றும் முத்துராமன் ஆகிய இருவரும் தங்களை விரட்டியதாக கூறியுள்ளனர். பொது குளத்தில் கீழ் சாதியை சேர்ந்த நீங்கள் எல்லாம் குளிக்க கூடாது என்று கூறி கம்பால் அடித்து விரட்டி தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின்னர் ஈடிவி பாரத்திடம் பேசிய பெண்கள், குளித்துக் கொண்டிருந்த தங்களை கற்களை வீசி அச்சுறுத்தியதாக கண்ணீருடன் கூறினர். தங்களின் ஆடைகளை முள்செடிகளின் மீது வீசி எறிந்ததோடு, அரைகுறையாக ஆடை அணிந்த தங்களை அடித்து விரட்டியதாகவும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் நிர்வாகியான ஜீவானந்தம், சாதிய ரீதியான ஒடுக்குமுறையால் பெண்கள் குளித்துக் கொண்டிருந்த உள்ளாடையான பாவாடையுடன் வீடு வரையிலும் திரும்பி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக விவரித்தார். தாசில்தாரிடம் புகார் அளிக்க முயன்ற போது, அவரும் தகாத வார்த்தைகளால் பெண்களை பேசியதாகவும் ஜீவானந்தம் குறிப்பிடுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் பேசுகையில், ஜனவரி 1ம் தேதி நிகழ்ந்த இந்த கொடுமையையடுத்து தனது மனைவி அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து தன்னிடம் கூறியுதாகவும், உறவினர்கள் உதவியுடன் அவரை தேற்றி மறுநாள் போலீஸில் புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார். அறந்தாங்கி காவல்நிலையத்திற்கு சென்ற போது, தங்களின் புகாரை ஏற்க மறுத்ததாகவும், பின்னர் நாகுடி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்ததாகவும் கூறியுள்ளார்.

நாகுடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஐயப்பன், முத்துராமன் ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த ஐயப்பன் முத்துராமன் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர். தப்பி ஓடிய ஐயப்பன் மற்றும் முத்துராமனை நாகுடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, இரட்டை டம்ளர் முறையை ஒழித்ததோடு, கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதிக்கப்படாதது தெரிந்து நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் மீண்டும் ஒரு சாதிய கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தீண்டாமை: புதுக்கோட்டை கலெக்டர் உட்பட மூவர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.