ETV Bharat / state

ஆளுநரின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் பதிலடி கொடுப்பார் - அமைச்சர் ரகுபதி

author img

By

Published : Jun 30, 2023, 8:37 AM IST

ஆளுநர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கின்றார் என்பது தெரியவில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை: மாமன்னன் திரைப்படத்தை பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து ஆளுநர் நீக்கியது சட்டப்படி செல்லுமா, செல்லாதா என்பது பற்றி எங்களது வழக்கறிஞர்கள் ஆலோசனை செய்து முடிவு எடுப்பார்கள். நிச்சயமாக சொல்கிறோம், ஒருவரை அமைச்சரவையில் வைத்துக் கொள்வதும், நீக்குவதற்கும் முழு அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. அவரது விருப்பம்தான் இறுதி முடிவு.

ஆளுநர் செந்தில் பாலாஜியை நீக்கியது பற்றி நாளை முடிவு எடுக்கப்படும். ஆளுநரின் இந்த நடவடிக்கையைப் பற்றி பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. ஆளுநருக்குள்ள அதிகாரம் என்ன என்பது பற்றி தெரியுமா, தெரியாதா என்று தெரியவில்லை. அவர் யாருக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கின்றார் என்பதும் தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரை, ஆளுநர் எடுத்த நடவடிக்கைக்கு நிச்சயமாக சரியான பதிலை நாளை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவிப்பார்.

இந்திய நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் தெரியும். அந்த அளவுக்கு ஒரு மோசமான சூழ்நிலை தமிழ்நாட்டில் நிலவி வருகிறது. ஒரு ஆளுநருக்கு அமைச்சரை நீக்கவோ, சேர்க்கவோ எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் எங்களுடைய அறிவுரைப்படிதான் நடக்க வேண்டும். ஆனால், நான் ஒருவரை நீக்குகின்றேன், வைத்துக் கொள்கின்றேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஆளுநர்கள், ஒவ்வொரு அமைச்சர்களாக நீக்குவேன் என்று சொன்னால் நீக்க முடியுமா அல்லது சேர்க்க முடியுமா? இது ஜனநாயக நாடாம் இல்லை சர்வாதிகார நாடா? அதிமுக போன்ற கட்சிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமைகளாக இருக்கின்ற கட்சிகள் மீது அமலாக்கத் துறை வேண்டுமென்றே வழக்குகள் போட்டு நடவடிக்கை எடுத்து, அவர்களை மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அந்தப் பணியை மட்டுமே அமலாக்கத்துறை செய்து வருகிறது. அமலாக்கத் துறை யார் மீது போட்ட வழக்குகள் என்ன நிலையில் உள்ளது என்பது பற்றியும், வழக்குகள் என்னென்ன என்பதும், அந்த வழக்கு என்ன நிலைமையில் இருக்கின்றது என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். யாரும் அமலாக்கத் துறைக்காக பயப்படப் போவதில்லை. நீதிமன்றம் இருக்கிறது, இன்னும் ஜனநாயகம் இருக்கிறது, நீதிமன்றத்தில் நீதி இருக்கிறது என்ற நம்பிக்கையோடுதான் அனைவரும் இருக்கின்றனர்.

என்னைப் பொறுத்தவரை, அவர்கள் ஆளுங்கட்சிக்கு அடிமையாக இருக்கிறவர்கள் மீதுள்ள வழக்குகளில் கை வைக்க மாட்டார்கள். முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன ஆனது? அவர் வீட்டில் இருந்து ரெக்கார்டுகள் வெளியே வீசப்பட்டது.

அதையே காரணம் காட்டி அன்றைக்கே கைது செய்திருக்க வேண்டும். ஆனால் ஆளுநர் என்ன செய்தார் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே, நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா, இல்லையா என்பதை 2024இல் மக்கள் முடிவு செய்வார்கள்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் அம்மோனிய வாயு கசிவு - பலருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டு மக்கள் அவதி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.