ETV Bharat / state

“அலையாத்தி காடுகளை உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது” - அமைச்சர் மெய்யநாதன்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 12:02 PM IST

Minister meyyanathan speech : வருகிற 2030ஆம் ஆண்டிற்குள் வெப்பமயமாதலை சீர் செய்யாவிட்டால் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Minister meyyanathan speech
அமைச்சர் மெய்யநாதன்

அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை குறித்த மாவட்ட அளவிலான பயிலரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பல்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த பயிலரங்கத்தை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பேசுகையில், "காலநிலை மாற்றம் என்பது உலகளாவிய பிரச்சினை. பசுமை தமிழகம் ஏற்படுத்துவதற்காகத்தான் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாகத்தான் வருடத்திற்கு 10 கோடி மரங்கள் வளர்ப்பது திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், 50 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் என்ற திட்டத்தை முதலமைச்சர் அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். உலக வெப்பமயமாதல் நிகழ்வால் தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று அறியப்பட்டுள்ளது. அதற்காகத்தான் அதிக அளவில் பனை மரங்கள் வளர்ப்பதற்கு அரசு முடிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அலையாத்தி காடுகளை உருவாக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதும், 243 குப்பைக் கிடங்குகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயோ மைனிங் முறைப்படி குப்பைகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 53 பணிகள் முடிவுற்று, 253 கோடி ரூபாய் மதிப்பிலான உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மண்ணில் மனிதன் மட்டுமே வாழ்வதற்காக இயற்கை படைக்கப்பட்டதில்லை. பல்லுயிர்களும் வாழ வேண்டும் என்பதுதான் நமது நோக்கம். தற்போது பல்லுயிர்கள் அருந்துவதற்கு தண்ணீர் கூட எங்கேயும் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. உலக வெப்பமயமாதல் நமக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மரங்களை வளர்ப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

புதுக்கோட்டையில் ஐந்து பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் இயற்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்தான் பல்வேறு விழிப்புணர்வுகளை அரசு எடுத்து வருகிறது. கார்பன் வெளியேற்றத்தை 43 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு.

வரும் 2030ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை அடையாவிட்டால் வெப்பம் அதிகரித்து அதிகரித்து, 1.5 டிகிரி செல்சியசுக்கு அதிகமாக சென்று விடும். ஆகையால், இதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த முயற்சியை எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.