ETV Bharat / state

"ஆசிரியரை மதித்ததால் நான் அமைச்சர் பொறுப்பில் உள்ளேன்" - அமைச்சர் மெய்யநாதன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 12:47 PM IST

புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மாணவர்களிடம் ஆசிரியர்களை நாம் மதித்து நடக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

free bicycles event
விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு

Minister Meyyanadhan Meet

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளத்தை அடுத்த வல்லத்திராகோட்டை இராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது, "ஆசிரியர்களை மாணவராகிய நாம் மதித்து நடக்க வேண்டும். இன்றும் எனது ஆசிரியர்களை நான் மதித்து நடந்து கொள்கிறேன். அதனால் தான் நான் அமைச்சர் என்ற உயர் பொறுப்பில் இருக்கிறேன். கல்வியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் இடங்களில் மாணவிகள் உள்ளனர்.

இது மிகவும் பெருமையாக உள்ளது. ஆனால் கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. இதை மாற்றி அமைத்தவர் தந்தை பெரியார். 40 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுப் பணிகளில் பெண்கள் அதிக அளவு இல்லாமல் இருந்தனர். ஆனால் தற்போதைய காலக் கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அரசுப்பணிகளில் அமர்ந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் அளித்த இலவச உயர் கல்வி திட்டத்தில் பயின்று தான் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அந்த காலங்களில் வறுமையின் காரணமாக உயர் கல்வி பெற முடியாமல் இருந்தது. அந்த நிலை நீடித்திருந்தால் நானும் ஏதாவது ஒரு கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருப்பேன். கருணாநிதி வழங்கிய இலவச உயர் கல்வித் திட்டத்தினால் தான், நான் கல்வி அறிவு பெற்று உங்கள் முன் அமைச்சர் என்ற உயர் பொறுப்பில் இருக்கிறேன்.

மேலும், புதுக்கோட்டை - அறந்தாங்கி வழித்தடங்களில் அதிகமான வேகத்தடை உள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து குற்றச்சாட்டு வந்தது. அதன் அடிப்படையில் முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு முதல் கட்டமாக புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து, கைக்குறிச்சி வரை நான்கு வழிச்சாலையாக மாற்ற 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜேஸ்வரி, திருவரங்குளம் ஒன்றிய குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, மாவட்ட கவுன்சிலர் உஷா, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:பட்டப்பகல்லில் எல்ஜேபி(R) தலைவர் அன்வர் கான் சுட்டுக்கொலை: உடலை காரில் வைத்து உறவினர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.