புதுக்கோட்டை: உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஒமைக்ரான் தொற்றின் உருமாறிய வேரியண்ட் பிஎஃப்7 அதிக அளவு பரவி வரும் சூழலில், எதிர்வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகளவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று(டிச.24) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதனொரு பகுதியாக புதுக்கோட்டையில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட செயலாளருமான சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காது கேளாதோர் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ‘அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் பிஎஃப்7 அதிக அளவில் பரவி வருகிறது. அதனுடைய தாக்கம் அதிக வீரியமிக்கதாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
அதனொரு பகுதியாக மத்திய சுகாதாரத் துறையும் அனைத்து மாநிலங்களும் கண்காணிப்பை தீவிர படுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் ஒடிசா, குஜராத் மாநிலங்களில் பரவி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது தமிழ்நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அதிகளவு கூடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு முறையாக நடவடிக்கை எடுத்து, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்.
கடந்த கரோனா காலத்தில் மருந்துகள் இல்லாத சூழ்நிலையில் பல முயற்சிகளை மேற்கொண்டு பொது மக்களை காத்து அதிமுக அரசு வெற்றி பெற்றது. இப்போது அனைத்து தடுப்பு மருந்துகள் இருக்கும் நிலையில், இந்த பிஎஃப்7 வைரஸை பரிசோதனை செய்வதற்கு ஆய்வகம் தயார் நிலையில் உள்ளதா என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தற்போது வரவுள்ள புதிய வைரஸை எந்த அளவிற்கு எதிர்கொள்ளும் என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் ஒரு கரோனா போன்று பெரும் தாக்கத்தை மக்கள் சந்திக்க இயலாத சூழ்நிலையில், தற்பொழுது எதிர்கொள்ள உள்ள புதிய வைரஸிலிருந்து பொதுமக்களை அரசு காக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:மதுவை ஒழிக்க 'பாமக 2.O' ஆரம்பம்: அன்புமணி ராமதாஸ்