நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கடந்த வாரம் சண்முகசுந்தரம் என்பவரும், நேற்று ராஜ் என்பவரும் தொடர் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, இதுபோன்று கந்துவட்டி வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அதிக வட்டி வசூலிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களைக் கண்காணித்து, வரைமுறைப்படுத்தக் கோரியும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த, முப்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் பெருமாள், ”குமாரபாளையத்தில் கந்துவட்டி கொடுமையால் மக்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாக உள்ளது. போதிய தொழில் வசதி இல்லாத காரணத்தால் தினந்தோறும் கூலி வேலை செய்துவரும் மக்கள் இதுபோன்று கந்துவட்டிக் கும்பலிடம் சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். அதிக வட்டி வசூலிக்கும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் கடன் பெறுபவர்கள், தாங்கள் வாங்கிய தொகையைவிட அதிகமாக வட்டி செலுத்தும் சூழல் உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக கவனித்து நடவடிக்கை மேற்கொண்டு, கந்துவட்டி கும்பலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்” என்றார்.