நாமக்கல்லில் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கலில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர், இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் மருத்துவர் ராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜா கூறுகையில், "கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சளி, இருமல் இருந்தாலே கொரோனா என மக்கள் அச்சப்படுகின்றனர். வீண் பீதியை அடையாமல் மக்கள் சுய சுகாதாரத்தை பேணி காத்தாலே போதும். அதாவது கை குலுக்குவதை தவிர்த்து நாள் ஒன்றிற்கு பத்து முறைக்கு மேல் கைகளை நன்கு கழுவ வேண்டும். பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதை முறையாக பின்பற்றினாலே கொரோனோவில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்" என்றார்.
தொடர்ந்து, இந்திய மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவின் மாநில தலைவர் சித்ரா பேசுகையில், "சமீபத்தில் மதுரையில் பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த கொடூரம் நடைபெற்றது. மத்திய மாநில அரசுகள் பெண் சிசுக்களின் பிறப்பு விகிதத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண் மருத்துவர்கள் கிராமங்களில் சென்று பெண் குழந்தைகளை பேணி காப்பதன் அவசியத்தை எடுத்துரைத்து வருகின்றனர்.
திருமணமான தம்பதியர்களில் சிலர், ஆண் குழந்தை வேண்டும் என தனியார் கருத்தரிப்பு மையங்களை நாடி வருகின்றனர். அதேபோல் பெண் ஒருவர் தன் வாழ்நாளில் இருமுறை மட்டுமே கருமுட்டை தானம் செய்ய வேண்டும் எனவும் அதுவும் 6 மாத இடைவெளியில்தான் கருமுட்டைகளை தானம் செய்ய வேண்டும்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக தொடர்ச்சியாக கருமுட்டைகளை தானம் செய்து வருகின்றனர். இதனால் மாதவிடாய் பிரச்னையும், எலும்பு தேய்மானமும் ஏற்படும்" என்றார்.