ETV Bharat / state

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போதைப் பொருள் பயன்படுத்திய மாணவர்கள்: மாவட்ட எஸ்.பி விசாரணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 15, 2023, 7:59 PM IST

Students Using Drugs: வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

students using drugs
வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்திய விவகாரம்

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்திய விவகாரம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில், பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு
பூங்காக்கள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் சுற்றித் திரிகின்றனர். மேலும், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் சுவர்களில் ஒட்டுவதற்கு பயன்படும் பசையைப் பயன்படுத்தி புதுவிதமான போதையை உருவாக்கி கொள்கின்றனர். அதுமட்டுமன்றி போதைப் பொருள்கள் மூலம் போதைக்கு அடிமையாவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து விட்டு நகராட்சிப் பூங்காவில் சுற்றித்திரிகின்றனர் என புகார் வந்த நிலையில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இருசக்கர வாகனத்தில் சென்று மாணவர்களை விரட்டி பிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பாதி மாணவர்கள் ஆசிரியரைக் கண்டவுடன் பூங்கா சுவர் ஏறி குதித்து தப்பித்துச் சென்றனர்.

இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது, “அரசுப் பள்ளிகளில் வெளியூரில் இருந்து மாணவர்கள் பயில்கின்றனர். மாணவர்கள் படிப்பு குறித்து பெற்றோர்கள் எந்த அக்கறையும் காட்டாத நிலையில், ஆசிரியர்கள் குறைந்தபட்சம் தண்டனை மாணவர்களுக்கு வழங்கும் விதத்தில் விதிகளை திருத்த வேண்டும். தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல் சம்பவமும் நடந்து வருகிறது. மாணவர்கள் பசையைப் பயன்படுத்தி புதுவிதமான போதையை ஏற்றிக் கொள்கின்றனர்” என வேதனை தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானது. இதனைத்தொடர்ந்து நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது மாணவர்கள் போதைக்கு அடிமையாவதாக வேதனை தெரிவித்த உதவி தலைமை ஆசிரியர் வைத்தியநாதனிடம் மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்தும், குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை மேற்கொண்டார்.

மாணவர்களை ஆசிரியர்கள் ஒழுங்காக கண்காணிப்பதாகவும், மாணவர்கள் மீது பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும், பூங்காக்கள் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் தினமும் ஒரு முறை ரோந்து பணி மேற்கொண்டு பள்ளி மாணவர்கள் இருந்தால் அறிவுரை கூறி அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், “மாணவர்கள் போதைப் பொருள்களைப் பயன்படுத்தினால் காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஊர் சுற்றும் மாணவர்களைக் கண்டிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.

இதையும் படிங்க:பூமியின் 4வது சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக கடந்த ஆதித்யா எல்1!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.