ETV Bharat / state

உயரமாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் கால்வாய் - அதிருப்தியில் பொதுமக்கள்

author img

By

Published : Dec 2, 2022, 6:38 PM IST

மயிலாடுதுறையில் சுற்றுச்சுவர் அமைப்பது போல் உயரத்தில் அமைக்கப்படும் மழை நீர் வடிகால் கால்வாயால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்

மயிலாடுதுறை: கும்பகோணத்தில் இருந்து சீர்காழி வரை (SH-64) மாநில நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது‌. மயிலாடுதுறை மாவட்டத்தில் உளுத்துக்குப்பை கிராமத்தில் இருந்து சீர்காழி சட்டநாதபுரம் வரை சாலையினை அகலப்படுத்தும் பணிகளுக்காக இடம் கையகப்படுத்தப்பட்டு பணிகள்‌ நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருநன்றியூர் கிராமத்தில் இரண்டாம் கட்டமாக சாலை பணிகள் தொடங்கப்பட்டு மழைநீர் வடிகாலுடன் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை வரவேற்ற அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

பொதுவாக மழைநீர் வடிகால் சாலையின் ஓரமாக பள்ளமாக அமைக்கப்படுவது வழக்கம். ஆனால், சாலையின் ஓரத்தில் இரண்டு அடிக்கும் மேல் உயரமாக கட்டடம் கட்டி மழைநீர் வடிகால் அமைத்துள்ளனர். இதனால், அருகில் இருக்கும் கடைகள், வீடுகள் பள்ளத்திற்குச்சென்றது.

இதனை சிறிதும் எதிர்பாராத அப்பகுதி மக்கள், மழை நீர் வடிகால் அமைப்பதற்குப் பதிலாக பெரிய காம்பவுண்ட் சுவற்றை எழுப்பி, பொதுமக்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். மேலும், அங்கிருக்கும் வீடுகளை விட இந்த மழை நீர் வடிகால் கட்டடம் மிகப்பெரியதாக இருப்பதாகவும், இதனை உடனடியாக தகர்த்தி சரியான போக்கில் மழை நீர் வடிகாலை அமைக்க வேண்டும் எனப்பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மழைக்காலங்களில் மழைநீர் வீடுகளில் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனைக் கண்டித்து இன்று (டிச. 02) பாமகவினர் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, மூன்று தினங்களில் உரியதீர்வு காணப்படும் என்றும்; அதுவரை சாலைப்பணிகள் அந்த பகுதியில் நடைபெறாது எனவும் அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

இதையும் படிங்க: கள்ளச் சாராய விற்பனை அமோகம் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.