ETV Bharat / state

"அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் - திருமாவளவன் அரசியலுக்காக குறை கூறுகிறார்"- அமைச்சர் ஐ.பெரியசாமி!

author img

By

Published : May 17, 2023, 9:42 PM IST

கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து எடப்பாடிக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை, திருமாவளவன் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார் என ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமி
Etv Bharat செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமி

செய்தியாளர்களைச் சந்தித்த ஐ. பெரியசாமி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வகையான வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி இன்று (மே 17) நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 500 பள்ளிகளில் வகுப்பறை கட்டடங்கள் 833 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, ஜூன் மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகளை , நகர சாலைகளுடன் இணைக்கும் வகையில் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த சாலைக்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

பொதுமக்கள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் இரண்டு லட்சத்து 23 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த துறையில் பொறுப்பேற்ற மூன்று மாதங்களில் 14 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருட திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கும் கள்ளச்சாராயம் விற்பனை நடபெறவில்லை. இந்த விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் நீதியரசர் போல் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராடினால் இணைந்து போராட தயாராக உள்ளதாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அவர் அரசியல் காரணங்களுக்காக குறை பேசுகிறார்" என பதில் அளித்தார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சாராயம் விற்பனை செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறித்து கேள்விக்கு, "குற்றவாளிகளுக்கும் குடும்பம் உள்ளது, பணத்தை வைத்து உயிரை மதிப்பீடு செய்யக் கூடாது, இழப்பீடு வழங்குவதற்கு ஸ்கேல் (அளவுகோல்) உள்ளதா என்ன?" என அவர் பதில் கூறினார்.

மேலும், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு தான் பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் அரசியலில் எடப்பாடி எடுபட மாட்டார் எனவும் கூறினார். இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார், கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள், அரசு அதிகாரிகள், கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்களுடன் நெருக்கமா? - மனம் திறந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.