ETV Bharat / state

மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

author img

By

Published : Apr 12, 2021, 3:35 PM IST

மதுரை: ரெங்கராஜபுரம் கிராமத்திற்கு சொந்தமான மயானத்தை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 200க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்

மதுரை மாவட்டம் ரெங்கராஜபுரம் கிராமத்திற்கு சொந்தமான மயானம் அலங்காநல்லூர் செல்லும் சாலை பூதகுடி பிரிவு அருகே உள்ள மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த மயானம் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக கூறி பொதுப் பணித்துறையினர் அதை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த கிராம மக்கள் மயானத்தை காலி செய்து தனியாருக்கு விற்பனை செய்ய உள்ளதாக பொதுப்பணித் துறையினர் மீது குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் தனியார் நிறுவனம் இந்த இடத்தில் பெட்ரோல் பங்க் அமைக்கவுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அலங்காநல்லூர் காவல்துறையினர், மதுரை வடக்கு தாசில்தார் விஜய முத்துக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படாத நிலையில் மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

மேலும் இந்த மயானம் கடந்த 50 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும், இதனை பொதுப்பணித்துறையினர் அகற்ற மாட்டோம் என உத்தரவாதம் அளித்தால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் மதுரை அலங்காநல்லூர் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் வாகன ஓட்டிகள், பேருந்துகள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கிடந்தனர்.

இதையும் படிங்க: வழக்கறிஞர் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.