ETV Bharat / state

விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழப்பு.. பள்ளி நிர்வாகம் சார்பில் காசோலை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 7:35 PM IST

தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் இன்று (செப்.13) காசோலை வழங்கப்பட்டது.

cheque
பள்ளி நிர்வாகம் சார்பில் காசோலை

பள்ளி நிர்வாகம் சார்பில் காசோலை

மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா காட்டுச்சேரி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறையால் மண்டல அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தரங்கம்பாடி தாலுகா செம்பனார் கோயிலில் உள்ள கலைமகள் மெட்ரிக் தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணன் மகன் ரிஷிபாலன்(17) 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று ஓடுதளத்தில் ஓடும்போதே மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

இதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் எனக் கூறி மாணவனின் பெற்றோர்கள், உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாணவனின் உயிரிழப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவிட்டார்.

அதில், ‘காட்டுச்சேரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியை துவக்கி வைக்க வேண்டிய மாவட்ட கல்வி அலுவலர், தமிழக முதலமைச்சரின் வருகை காரணமாக தாமதமாக வந்ததால் மாணவரின் உயிர் பறி போனது என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு தகுந்த உதவிகளை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஓடுதளத்தில் ஓடிக்கொண்டிருந்தபோது மாணவன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது வேதனை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஏற்கனவே, உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, பள்ளியில் இன்று (செப்.13) நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு பள்ளியின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண தொகைக்கான காசோலையை மாணவனின் பெற்றோரிடம் எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

முன்னதாக, உயிரிழந்த மாணவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், மாணவனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது மாணவரின் தாய் மற்றும் சக மாணவர்கள் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.

இதையும் படிங்க:சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் அதிநவீன லேப்ராஸ்கோபி பயிற்சி முகாம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.