ETV Bharat / state

மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி: சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்

author img

By

Published : Sep 23, 2020, 7:21 PM IST

மதுரை: திருமங்கலம் அருகே விவசாயப் பணியிலிருந்த இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சாலை மறியல்
சாலை மறியல்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் அக்னி வீரன். இவருக்கு சுமதி என்ற மனைவியும் 2 மகன் ஒரு மகள் உள்ளனர்.

இன்று (செப்.23) காலை இவரது தோட்டத்தில் உழவு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வயல் வழியாகச் சென்ற கேபிள் வயர்கள் மின்கம்பத்தில் விழுந்திருந்தது. அதனை அப்புறப்படுத்துவதற்காகச் சென்ற அக்னி வீரன் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர் அக்னி வீரன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிந்துபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், வயல்வெளி பகுதியில் கேபிள் வயர்களை இணைப்பு கொடுத்தவர்கள் மீதும் அறுந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பிகளை சரி செய்யாமலும் தொடர்ந்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமலும் உள்ள மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கிச் செல்வோம் எனக்கூறி அக்னி வீரன் உறவினர்கள் திருமங்கலம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி பேச்சுவார்த்தை நடத்தியும் பேச்சுவார்த்தைக்கு உடன்படாததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் பொதுமக்கள் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து நிலைமையை சீர் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.