ETV Bharat / state

எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்

author img

By

Published : Dec 2, 2020, 7:21 PM IST

Updated : Dec 7, 2020, 8:00 PM IST

கைநட்டத்துடன் விவசாயம் மேற்கொண்டுவரும் விவசாயிகளுக்கு மேலும் பேரிடியாக விழுந்துள்ளது, இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டம். நீர்நிலைகள், விளைநிலங்களை அழித்து குழாய் பதிக்கும் பணியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. முறையாய் மக்களிடம் பேசி, கிராம சபைத் தீர்மானம் இயற்றப்பட்டு, இதனை ஏன் கொண்டு வரவில்லை என கம்பூா் கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எரிவாய் குழாய் அமைக்க எதிர்ப்பு
எரிவாய் குழாய் அமைக்க எதிர்ப்பு

மதுரை: எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரை இறக்குமதி செய்யப்பட்ட திரவ இயற்கை எரிவாயுவை சுத்திகரித்து கொண்டு செல்லும் திட்டத்தை ஐஓசி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் வழியாகவே திரவ இயற்கை எரிவாயு விநியோகம் செய்யப்படும் என ஐஓசி நிறுவனம் பரப்புரை செய்கிறது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் இத்திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுவருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கருங்காலக்குடி அருகேயுள்ள உடப்பன்பட்டி கிராமத்தில் கதிர் முற்றி விளைந்த நெல் வயலுக்குள் அப்பகுதி மக்களின் அனுமதியைப் பெறாமலேயே ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு குழாய்கள் பதிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதைக் கண்டு கொதிப்படைந்த மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதன் விளைவாக குழாய் பதிக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு தருவதாக ஆசை வார்த்தைக் கூறி அலுவலர்கள் எரிவாயு குழாய்களை பதிக்க முயலுவதாகக் கூறும் கம்பூர் ஊராட்சி இளைஞர் செல்வராஜ், 'இந்தத் திட்டம் குறித்து அந்தந்த பகுதி மக்களிடம் எந்தவித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை. இப்படி திடுதிப்பென்ற எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது' என்கிறார்.

கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் சற்றேறக்குறைய 18 கி.மீ.க்கும் மேல் இந்தக் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுகிறது. குழாய்கள் செல்லும் அவ்வழியில் நெல் வயல்கள், தென்னை, வாழை, புளியந்தோப்புகள், காய்கறித் தோட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் வெட்டிச் சாய்த்துவிட்டே இந்தப் பணிகளைச் செய்து வருகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

எரிவாயுக்குழாய்கள் செல்லும் பகுதிகளில் விபத்து நடைபெற்ற சம்பவங்கள் பல நடந்திருந்தும் விழிப்புணர்வின்றி இப்பணி செய்வது குறித்து கருங்காலக்குடியைச் சேர்ந்த பக்ருதீன் அலி அகமது கேள்வியெழுப்புகிறார்.

எங்களின் நிலத்தை அழித்து எரிவாயுக்குழாயா? - ஐஓசிக்கு எதிராக கொந்தளிக்கும் கிராமத்தினர்

”கைநட்டத்துடன் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் மேலும் பேரிடியாக விழுந்துள்ளது. நீர்நிலைகளை அழித்தும் குழாய் பதிக்கும் பணியில் ஐஓசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. முறையாய் மக்களிடம் பேசி, கிராம சபைத் தீர்மானம் இயற்றப்பட்டு, இதனைக் கொண்டு வந்திருக்க வேண்டும். தற்போது 5 மடங்கு 8 மடங்கு இழப்பீடு என்று பேரம் பேசுவது வேதனைக்குரியது” என்கிறார் பக்ருதீன் அலி.

இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, இப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கடந்த நவம்பர் 30ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாவட்ட ஆட்சியரிடம் எங்களுக்காக பரிந்துபேசினார். கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் எரிவாயுக் குழாய் விபத்து ஏற்பட்டு 15 பேர் பலியான சம்பவத்தை மாவட்ட ஆட்சியரிடம் சுட்டிக்காட்டி, இத்திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை விடுத்தார்.

முல்லைப் பெரியாறு நீட்டிப்புக் கால்வாயை கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள சூரம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த உழவர்கள் நெடுங்காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக கடந்தாண்டு 100 கி.மீ. தூரம் நடைப்பயணமும் மேற்கொண்டனர். ஆனால் அந்தக் கோரிக்கை இன்னும் கூட நிறைவேற்றப்படவில்லை. விளைநிலங்களைப் பாழாக்கும் திட்டங்கள் மட்டும் மின்னல் வேகத்தில் தொடங்கப்படுகின்றன.

முதற்கட்டமாக குழாய் பதிக்கும்போதே ஐஓசி பொறியாளரிடம் கிராம சபையில் இது குறித்து பேசக் கோரிக்கை விடுத்ததாகக் கூறும் தங்கம் அடைக்கண்,” அது குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்கிறார்.

இடைத்தரகர்கள் மூலமாக விவசாயிகளிடம் தனித்தனியாகப் பேரம் பேசி வருவதாகத் தெரிவிக்கும் அவர், இந்த விசயத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்.

வாழ்வாதாரம் அழிக்கப்படும், நிலங்கள் மொத்தமும் பாழாகும் என்ற அச்சத்துடன் உள்ள கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஐஓசி நிறுவனமோ அல்லது அரசின் சார்பாகவோ இதுவரை யாரும் வந்து பேசவில்லை. இதற்கு ஒரு முடிவு கிடைக்காதவரை எரிவாயுக் குழாயை பதிக்க முடியாது என்பதிலும் அம்மக்கள் மிகவும் உறுதியாக உள்ளனர். மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை புறந்தள்ளிவிட்டு எரிவாயுக்குழாய் அமைப்பதென்பது, எரியும் கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதைப் போன்றதுதான்...

இதையும் படிங்க:நிவர் புயல்: விழுப்புரத்தில் ஆய்வுசெய்த மத்திய குழு

Last Updated :Dec 7, 2020, 8:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.