ETV Bharat / state

காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்: 6 பேர் இடமாற்றம்

author img

By

Published : Feb 13, 2020, 7:50 AM IST

மதுரை: விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரத்தில் துணைப்பதிவாளர் அன்புச்செழியன் உள்ளிட்ட ஆறு பேரை இடமாற்றம் செய்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

mku answer sheet missing  மதுரை காமராஜர் பல்கலைக் கழகம்  துணைப்பதிவாளர் அன்புச் செழியன்  mku answer sheet missing case  six transfer include sub register of mku in answer sheet missing issue
காமராஜர் பல்கலைக்கழக விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் நவம்பர் மாதம் செமஸ்டர் தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில், பிப்ரவரி இரண்டாவது வாரமாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக விசாரித்தபோது திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களின் விடைத்தாள்கள் பல்கலைக்கழகத்துக்கு மதிப்பீட்டுக்குக் கொண்டுவரும்போது காணாமல் போனதால் தேர்வு முடிவுகள் வெளியிடத் தாமதமாவது தெரியவந்தது.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் மு. கிருஷ்ணன், மாயமான விடைத்தாள்களைத் தேட உத்தரவிட்டதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத் தேர்வுத்துறை ஊழியர்கள் விடைத்தாள்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில், மாயமான விடைத்தாள்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட திண்டுக்கல் கல்லூரியைச் சேர்ந்த ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட விடைத்தாள்கள் அக்கல்லூரியின் விடைத்தாள்கள் தானா? என்பது குறித்து கேட்கப்பட்டது. இதில், அக்கல்லூரியின் விடைத்தாள் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சிண்டிகேட் உறுப்பினர்கள் குழு அடங்கிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் பல்கலைக்கழகத்தில் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்கலைக்கழக தேர்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த துணைப்பதிவாளர், உதவிப்பதிவாளர், கண்காணிப்பாளர் உள்பட 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு நாள்கள் விசாரணை முடிவடைந்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க முடிவெடுக்கப்பட்டது.

முதற்கட்டமாக தேர்வுத்துறையோடு தொடர்புடைய துணைப்பதிவாளர் அன்புச்செழியன், உதவிப் பதிவாளர் உதயசூரியன், கண்காணிப்பாளர் ரவீந்திரன், உதவியாளர்கள் ஜெயராஜ், வேலுச்சாமி உள்ளிட்ட ஆறு பேரை உடனடியாக இடமாற்றம் செய்யவும் அவர்களுக்கு மெமோ வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஓரிரு நாள்களில் பல்கலைக்கழக ஆட்சிக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டு, விடைத்தாள்கள் மாயமான சம்பவத்தில் தொடர்புடையோர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி - லயோலா கல்லூரி சாம்பியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.