ETV Bharat / state

நாளை தமிழகம் வரும் குடியரசுத் தலைவர்.. மதுரையில் போக்குவரத்து மாற்றம்!

author img

By

Published : Feb 17, 2023, 9:25 AM IST

மகா சிவாரத்திரியை முன்னிட்டு நாளை குடியரசுத் தலைவர் மதுரைக்கு வர உள்ளதை ஒட்டி, மதுரை மாநகரில் சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள்!
குடியரசுத் தலைவர் வருகையை ஒட்டி மதுரையில் போக்குவரத்து மாற்றங்கள்!

மதுரை: மகா சிவராத்திரி நாளை (பிப்.18) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு முதல் முறையாகத் தமிழ்நாட்டுக்கு வருகை தர உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து நாளை காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் திரெளபதி முர்மு, நண்பகல் 12 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

பின்னர் மாலை கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளார். இதனை முன்னிட்டு நாளை காலை முதல் மதுரை மாநகரில் சில போக்குவரத்து மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்படி தற்காலிக போக்குவரத்து மாற்றங்களுக்குப் பொதுமக்களும், வியாபாரிகளும் மற்றும் விமானநிலையத்திற்குச் செல்லும் பயணிகளும் ஒத்துழைப்பு வழங்குமாறு மதுரை மாநகர காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ள சாலைகள்: மதுரை விமான நிலையம், விமான நிலையம் முதல் தெற்கு வாசல் சந்திப்பு வரை, தெற்கு வெளி வீதி முழுவதும் - தெற்குவாசல் சந்திப்பு முதல் கிழக்கு வாசல் சந்திப்பு வரை, கிழக்கு வெளிவீதி முழுவதும், காமராஜர் சாலை விளக்குத்தூண் முதல் கீழவாசல் சந்திப்பு வரை, மீனாட்சி அம்மன் கோயில் தெரு, வெண்கல கடைத் தெரு,

தெற்கு ஆவணி மூல வீதி பழைய காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து ஜடாமுனி கோயில் சந்திப்பு, கிழக்கு மாசி வீதி - மொட்டை பிள்ளையார் கோயில் முதல் விளக்குத்தூண் வரை, அழகர் கோயில் சாலை இருபுறமும் கோரிப்பாளையம் முதல் தாமரை தொட்டி வரை ஆகும்.

போக்குவரத்து பாதை மாற்றங்கள்:

தெற்கு வாசல் சந்திப்பிலிருந்து பெருங்குடி வழியாக மண்டேலா நகர் செல்லக்கூடிய பேருந்துகள் முத்து பாலம், தேவர் பாலம் வழியாக பழங்கானத்தம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக நான்குவழிச்சாலையை அடைந்து மண்டேலா நகர் செல்ல வேண்டும்.

நகரிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் அனைவரும் ரிங்ரோடு சாலையில் விரகனூர் சந்திப்பு, மண்டேலா நகர் சந்திப்பு வழிகளைப் பயன்படுத்தியும், திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகள் திருப்பரங்குன்றம், அவனியாபுரம் செம்பூரணி சாலை வழியாக நான்கு வழிச்சாலையை அடைந்து, மண்டேலா நகர் சென்று, பெருங்குடி வழியாக விமான நிலையம் செல்ல வேண்டும்.

இந்த வாகனங்கள் வில்லாபுரம், அவனியாபுரம் வழியாக விமான நிலையம் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் மற்றும் அவர்களுக்கான வாகனங்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமான நிலையம் செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை விமான நிலையத்திற்கு வாகனத்தில் வரக்கூடிய பயணிகள் வாகன வழித்தட எண் 2இல் மட்டுமே பயணிகளை இறக்கிவிடவோ அல்லது ஏற்றிக்கொண்டு செல்லவோ அனுமதிக்கப்படுவர்.

மேலும் பயணிகளை ஏற்றிச்செல்லவோ மற்றும் இறக்கிவிடவோ வரும் வாகனங்களின் ஓட்டுநர்கள், பயணிகளின் பயணச் சீட்டின் Soft copyயை தனது மொபைல் போனில் வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க: குடியரசுத் தலைவருக்கு தந்தி.. தமிழ்நாடு வருகைக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.