ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதிகோரி உயர் நீதிமன்றக்கிளையில் மனு!

author img

By

Published : Jul 21, 2022, 8:51 PM IST

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதிகோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறைச்செயலர் 3 மாதங்களில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்ற அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

மதுரை: தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கிவரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தைத்தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசு ஆணை 72இன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைக் கூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப்பொருள்கள் உள்ளன. அவசரகால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக்கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் கரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்டக்குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர். தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்யவும் உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது.

ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும்; அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்" எனவும் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் S.S. சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறைச்செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டார். அதே நேரத்தில் வேறு நபர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், அதனையும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் பேக்கரியை அடித்து நொறுக்கிய கும்பல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.