ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த கோரிக்கை - நிர்வாக பொறியாளர், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Jun 5, 2023, 11:09 PM IST

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த அனுமதி வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கில், பெரியாறு அணையின் மதுரை நிர்வாக பொறியாளர் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

mullaiperiyaru
முல்லைப் பெரியாறு

மதுரை: மதுரையைச் சேர்ந்த பொறியாளர் ரெங்கன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் ஜீவாதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. அணையில் 152 அடி வரை நீரை தேக்கி வைக்கலாம். ஆனால் கேரள அரசின், நிர்பந்தங்களால் 152 அடி வரை தேக்கி வைக்க முடியவில்லை. தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் எனில், அணையை பலப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கைக்கு தமிழக பொறியாளர்களின் முயற்சிக்கு கேரள அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப்பாதை வழியாகச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆனால், கேரள அரசு அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக 1,886ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அணையை பராமரிக்க கேரள அரசின் அனுமதி தேவையில்லை. எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணையை வல்லக்கடவு நிலப்பாதை வழியாகச் சென்றடைவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். 23 மரங்களை வெட்டுவது உட்பட, பேபி அணையை பழுது பார்க்கவும் மற்றும் பலப்படுத்தவும் அனுமதி வழங்க வேண்டும். மேலும், வல்லக்கடவு நிலப்பாதை வழியாக முல்லைப் பெரியாறு அணையை அடைந்து அணையை வலுப்படுத்துவதற்காக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று(ஜூன் 5) உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பெரியாறு அணையின் மதுரை நிர்வாக பொறியாளர், தேனி மாவட்ட ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும், இதேபோன்ற கோரிக்கையுடன் நிலுவையில் உள்ள வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.

முல்லை பெரியாறு அணை: 1880-களில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட பகுதியில் முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. அப்போது தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் துன்பப்பட்டு வந்ததால், முல்லை பெரியாற்றில் இருந்து கடலில் கலக்கக்கூடிய உபரிநீர், முல்லை பெரியாறு அணை மூலம் தமிழக விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், முல்லை பெரியாறு அணையில் அதிகளவு தண்ணீர் தேக்கி வைத்தால், அணைக்கு ஆபத்து என கேரளாவில் உள்ள அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அணையில் 137 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேக்கி வைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேநேரம் முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மையை மத்திய அரசின் நிபுணர் குழுக்கள் பலமுறை ஆய்வு செய்து உறுதிப்படுத்தியுள்ளதாகவும், கடலில் கலக்கும் உபரி நீரில் ஒரு சிறு பகுதியைத்தான் தமிழகம் பயன்படுத்துகிறது என்றும் தமிழக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போக பாசன வசதிக்காக நீர் திறப்பு - தமிழக அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.