ETV Bharat / state

செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க கெடு விதித்த மதுரைக்கிளை!

author img

By

Published : Aug 10, 2023, 8:06 AM IST

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யவும், செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்றவது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், “இந்தியாவில் செம்மொழி என 6 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்து மொழிகளிலும் மிகப் பழமையான மொழியாக தமிழ் இருந்து வருகிறது. உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் தமிழர்களாக இருந்து வருகின்றனர்.

ஆனால், கடந்த மூன்று வருடங்களாக தமிழ் மொழி வளர்ச்சிக்கு என 22.94 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. 14 ஆயிரம் நபர்களை மட்டும் கொண்ட சமஸ்கிருத மொழிக்கு கடந்த மூன்று வருடங்களில் 643.85 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள இந்தியா முழுவதும் 27 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட சமஸ்கிருதத்திற்கு 22 சதவீதம் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. எனவே, செம்மொழியான தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி ரூபாய் அளவு நிதி ஒதுக்கீடு செய்யவும், சென்னையில் உள்ள மத்திய செம்மொழி கல்வி நிறுவனத்தை நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றவும், இந்தியா முழுவதும் செம்மொழியான தமிழை கொண்டு செல்வதற்கு கல்வி நிறுவனங்கள் தொடங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாதி ஆகியோர் அடங்கிய அமர்வு, “செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழியை வளர்ப்பதில் மத்திய அரசுக்கு ஆர்வம் உள்ளது. அதேநேரம், போதுமான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

தமிழ் வளர்ச்சி நிறுவனத்தின் கிளையை தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதிலும், வெளிநாடுகளிலும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழி வளர்ச்சியைப் பொறுத்தவரை, தொலைநோக்கு பார்வையுடன் கூடிய முன்னெடுப்புகள் எதுவும் இன்னும் துவங்கவில்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் தமிழின் ஆழம் எதிரொலிக்கிறது. கலை மற்றும் இலக்கியத்திற்கு மொழி பெரும் பங்காற்றியுள்ளது.

தமிழ்நாடு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நீண்ட மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தமிழ் மொழி இந்தியாவின் பழமையான செம்மொழிகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்க்கும் மொழியாகும். மத்திய அரசு வழக்கின்போது வைக்கப்பட்ட வாதங்களிலும், தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் தமிழின் தொன்மையையும், திருக்குறளின் முக்கியத்துவத்தையும், மத்திய அரசு பல பொதுக்கூட்டங்களில் ‘திருக்குறள்’ பற்றி பேசி வருவதாக தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மொழியை வளர்க்க முடியாது. மத்திய பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் மொழி துறைகள் மற்றும் மொழியை மேம்படுத்துவதற்கான இருக்கைகளை நிறுவுவதன் மூலம் பொதுமக்கள் மொழியைக் கற்கும் வாய்ப்பை உருவாக்க முடியும். எனவே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து செம்மொழி தமிழாய்வு மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாக்க 16 வாரத்தில் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: வணிக நோக்கில் சுரண்டப்படும் நிலத்தடி நீர் குறித்து வழக்கு தள்ளி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.