ETV Bharat / state

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 2:19 PM IST

Balveer Singh Case: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்டதாக அருண்குமார் மற்றும் சந்தோஷ் ஆகியோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai highcourt
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

மதுரை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சதிஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்தார். அதில், ‘அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பொய்யான வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதக் காவலில் வைத்து காவல்துறை என்னையும், எனது சகோதரரையும் கடுமையாகத் தாக்கினர்.

அப்போது, எனது சகோதரர் அருண்குமாரின் நான்கு பற்கள் உடைக்கப்பட்டன. இதில், நான் மட்டுமன்றி விசாரணைக் கைதிகள் சிலரது பற்களை உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்தார். அதைத் தொடர்ந்து என்னை காவலர்கள் சிறையில் அடைத்தனர்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிசிஐடி காவல்துறை குற்றப்பத்திரிகை விரைந்து தாக்கல் செய்ய வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை எனக்கு வழங்க வேண்டும்.

காவல்துறை அதிகாரி தாக்கியதில் பற்கள் உடைந்த எனக்கு எஸ்சி/எஸ்டி (SC/ST) பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக உயர்மட்டக் குழு விசாரணை அதிகாரியான அமுதா மற்றும் திருநெல்வேலி சார் ஆட்சியர் விசாரணை அறிக்கைகளை தனக்கு வழங்கக்கோரி ஏற்கனவே எனது சகோதரர் அருண்குமார் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எனக்கும், எனது சகோதரருக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி இழப்பீடு வழங்கப்பட வேண்டும். எனது தாய் ராஜேஸ்வரி இழப்பீடு வழங்கக் கோரி கடந்த ஜூன் மாதம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

காவல் துறையினர் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு குறைந்தபட்ச இழப்பீடு வழங்க வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளில் இடம் உள்ளது. ஆனால், விசாரணை செய்த அதிகாரிகள் மனுவை பரிசீலிக்கவில்லை. எனவே, வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின் படி, உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருநெல்வேலி ஆதி திராவிட நலத்துறை அதிகாரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க:ராணிப்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீச்சு - ஒருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.