ETV Bharat / state

போலீஸ் தாக்கி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: காவல்துறை தலைவர் பதிலளிக்க உத்தரவு!

author img

By

Published : Sep 16, 2020, 5:10 PM IST

மதுரை: ஆட்டோ ஓட்டுநர் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் முதன்மை செயலாளர், காவல்துறை தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் குமரேசன் ஆட்டோ ஓட்டுநராக தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் ஜூன் மாதம் திடீரென ரத்த வாந்தி எடுத்ததால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதித்தோம்.
அப்போது அவரிடம் விசாரணை செய்தபோது எனக்கும் எனது பகுதியில் உள்ள மற்றொருவருக்கும் உள்ள இடப் பிரச்சினை குறித்து வீரகேரளம் காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் என்பவர்கள் இருவரும் தனது மகனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் உடம்பில் உள்காயம் ஏற்பட்டு சிறுநீரகம், நுரையீரல், மர்ம உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த எனது மகன் ஜூன் 28ஆம் தேதி மரணமடைந்தார். வீரகேரளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர், காவலர்கள் தாக்கியதால் தான் என் மகன் மரணம் அடைந்தார் என கூறி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம்.

எனது மகன் இறப்பிற்கு காரணமான உதவி ஆய்வாளர்கள், காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். மேலும் அரசு வேலையும் உரிய இழப்பீடு பெற்றுத் தருவதாகவும் உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நிவாரணமும் எனக்கு கிடைக்கவில்லை.
எனது மகன் இறப்பிற்கு காரணமான உதவி ஆய்வாளர், காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது மகனின் மருத்துவ அறிக்கை, உடற்கூறு ஆய்வு அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் மகன் இறப்பிற்கு காரணமான காவலரிடம் இருந்து ரூபாய் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்ய வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும், வீரகேரளம் காவல்துறையினரிடம் இருந்து தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் குமரேசனை உதவி ஆய்வாளர், காவலர்கள் அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதன் காரணத்தாலே உயிரிழந்தார் என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்து அக்டோபர் 9ஆம் தேதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.