ETV Bharat / state

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று தொடங்குகிறது

author img

By

Published : Jan 16, 2023, 7:23 AM IST

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்குகிறது
பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்குகிறது

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று காலை 8 மணி அளவில் ஜல்லிகட்டு போட்டி தொடங்குகிறது.

பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று தொடங்குகிறது

மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிகட்டு போட்டி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் 335 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு 1000-க்கும் மேற்பட்ட காளைகளை பிடிக்க உள்ளனர். மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துகொண்டவுடன் போட்டி தொடங்கும்.

போட்டியில் பங்கேற்கவுள்ள காளைகளுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்படுவதோடு, போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீர்ர்களுக்கும் மருத்துவபரிசோதனை செய்யப்படும். இந்த போட்டிக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 160 பேர் கொண்ட மருத்துவக்குழுவினரும், 6 மொபைல் மருத்துவக்குழுவினரும், 15 ஆம்புலன்ஸ்களும், 60 பேர் கொண்ட கால்நடை மருத்துவக்குழுவினரும், கால்நடைக்கான ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புதுறை வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

போட்டி தொடங்கிய பின், ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் 45 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்று நடைபெறவுள்ளது. முதலில் பாலமேடு கிராம கோவில்களுக்கு சொந்தமான காளைகள் வரிசையாக அவிழ்க்கப்பட்டு, பின்னர் போட்டியில் கலந்துகொள்ளும் காளைகள் வரிசையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்படும்.

போட்டியில் முதலிடம் பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் ஒன்றும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக் ஒன்றும் முதல் பரிசாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சார்பாக வழங்கப்படவுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறப்பாக விளையாடும் காளைக்கு அலங்காநல்லூரை சேர்ந்த பொன் குமார் சார்பில் கறவை பசு மாடு கன்றுடன் பரிசு வழங்கப்பட உள்ளது. இதேபோன்று போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக களம் காணும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், மற்றும் சிறந்த காளைகளுக்கும் பைக், தங்க காசு, லேப்டாப், குக்கர், எல்.இ.டி TV, பிரிட்ஜ், தங்ககாசு, கட்டில் மெத்தை, சைக்கிள், பீரோ போன்ற எண்ணற்ற பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 1,500-காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். போட்டிக்கு வரும் காளைகளை அழைத்துவரும் வாகனங்களில் போட்டிக்கான அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே சோதனை சாவடிகளில் அனுமதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போட்டியில் காளைகள் டோக்கன் வரிசைப்படி அவிழ்த்துவிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. பாலேமடு ஜல்லிக்கட்டு போட்டியை பாலமேடு கிராம பொது மகாலிங்க மடத்து கமிட்டி சார்பில் அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து சமத்துவமாக ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.

போட்டியின் போது 1கிலோமீட்டர் தூரம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 100மீட்டர் வரை தேங்காய் நார் பரப்பபட்டுள்ளது. காளைக்கான கலெக்சன் பாயிண்டில் உடைப்பு ஏற்படாதவாறு இரண்டடுக்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போட்டி நடைபெறும் பாலமேடு கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிணறுகளில் காளைகள் உள்ளே விழுந்து காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிணறுகளில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.