ETV Bharat / state

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - உதவி திட்ட அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 8:13 PM IST

PMAY Scheme: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில், தகுதி இல்லாத நபர்களுக்குப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து உதவி திட்ட அலுவலர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

irregularity-in-pmay-scheme-mhmb-order-asst-project-officer-directed-to-file-report
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு - உதவி திட்ட அலுவலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

மதுரை: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில், தகுதி இல்லாத நபர்களுக்குப் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் ஒதுக்கீடு செய்ததைக் கண்டறிய வருவாய்க் கோட்டாட்சியரின் கீழ் குழு அமைக்கக் கோரிய வழக்கில், உதவி திட்ட அலுவலரை விசாரணை அதிகாரியாக நியமித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசால் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி தற்போது மக்கள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக வருவதற்கு சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பெறும் வகையில் விதிகள் உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வையம்பட்டி கிராமத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இதுபோன்ற திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தகுதியானவர்களின் பெயர்களைக் கிராம சபை கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பெயரில் 47 பேர் கொண்ட விபரங்கள் கொண்ட விண்ணப்பங்கள் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதில், 17 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்குத் தகுதி இல்லை எனவும் கூறப்பட்டது. ஆனால், ஊராட்சி மன்ற தலைவர் தலையிட்டால் தகுதி இல்லாத 17 பேர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது முற்றிலுமாக சட்டத்துக்குப் புறமானது. இதுபோன்று விதியை சட்டத்துக்குப் புறம்பாகத் தகுதி இல்லாத நபர்களுக்கு அரசுத் திட்டத்தை வழங்குவது குற்றமாகும்.

எனவே, தகுதி இல்லாத நபர்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ததைக் கண்டறிய வருவாய்க் கோட்டாட்சியர் கீழ் குழு அமைத்து விசாரணை செய்ய உத்திராட வேண்டும்." எனத் தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த முறைகேடு தொடர்பாக உதவி திட்ட அலுவலரை விசாரணை அதிகாரியாக நியமித்து முறைகேடு புகார்கள் தொடர்பாக 4 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் எம்பி கௌதம சிகாமணி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.