ETV Bharat / state

கரோனாவால் குழந்தை இறந்ததாக நாடகம்: தொண்டு நிறுவனம் மீது புகார்!

author img

By

Published : Jun 30, 2021, 3:04 PM IST

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த ஒரு வயது பச்சிளம் குழந்தை கரோனா தொற்றால் உயிரிழந்ததாக போலியான ஆவணங்களைக் கொண்டு மயானத்தில் புதைத்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரோனாவால் குழந்தை இறந்ததாக நாடகம்
கரோனாவால் குழந்தை இறந்ததாக நாடகம்

மதுரை: ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு அருகே இதயம் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. இங்கு சாலையோரம் வசித்த 100க்கும் மேற்பட்ட முதியோர்களை மீட்டு பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் மேலூர் அருகேவுள்ள சேக்கிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதரவற்ற மனநலம் குன்றிய ஐஸ்வர்யா என்ற இளம்பெண் அவரது பெண் குழந்தை உள்ளிட்ட மூன்று குழந்தைகளுடன் அனுமதித்துள்ளனர்.

ஐஸ்வர்யாவின் மூன்றாவது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மதுரை நரிமேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த ஜூன் 11ஆம் தேதி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குழந்தை கரோனாவால் உயிரிழந்ததா?

இதனையடுத்து குழந்தைக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறி கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்க வேண்டும் என நகர்புற மருத்துவமனை பரிந்துரை கடிதம் வழங்கியுள்ளது.

இதனை பெற்றுக்கொண்ட தொண்டு நிறுவனத்தினர் குழந்தையை அரசு மருத்துவமனையில் அனுமதிக்காத நிலையில் திடீரென இன்று (ஜூன் 30) காலை கரோனாவால் உயிரிழந்ததாக கூறி தத்தனேரி மயானத்தில் தாய் ஐஸ்வர்யா முன்பாக குழந்தையை புதைத்துள்ளனர்.

போலி ஆவணங்கள் மூலம் குழந்தை புதைப்பு:

இதனையடுத்து ஐஸ்வர்யாவை இல்லத்தில் சேர்த்த சமூக ஆர்வலர்கள் சிலர், குழந்தை இறந்தது குறித்து தொண்டு நிறுவனத்திடம் தகவல் கேட்டுள்ளனர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளனர். தொடர்ந்து குழந்தையை புதைத்தது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது அவர்கள் அளித்த ஆவணங்கள் முழுவதும் போலியாக இருப்பதை சமூக ஆர்வலர்கள் கண்டறிந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கவே, மாவட்ட குழந்தை நல அலுவலர், வட்டாட்சியர் , காவல் துறையினர் ஆகியோர் ஆதரவற்றோர் இல்லத்தின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கடந்த 16 நாள்களாக குழந்தையை தலைமறைவாக வைத்திருந்ததும், கரோனாவால் உயிரிழந்ததாக கூறி மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி தத்தனேரி மயானத்தில் புதைத்ததும் தெரியவந்தது.

குழந்தை விற்பனை செய்யப்பட்டானா?

மேலும், முதியோர் இல்லம் என்ற நிலையில் அங்கீகாரமின்றி குழந்தைகளை தங்க வைத்ததும், அதில் சில குழந்தைகள் காரணமின்றி திடீரென காணாமல் போனது போன்ற முன்னுக்கு பின் தவறான பதிவிட்டிருந்தது. அதனடிப்படையில், போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி மனநலம் குன்றிய பெண்ணின் குழந்தை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் குழந்தை உண்மையில் இறந்து புதைக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் குழந்தையை புதைத்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தும் வகையில் உடற்கூராய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டு நிறுவனருக்கு போலீஸ் வலை:

தொடர்ந்து அந்த காப்பகத்தில் அலுவலர்கள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். புகாருக்கு ஆளாகிய இதயம் அறக்கட்டளை உறுப்பினர்கள் சிலருக்கு சிறந்த சேவைக்கான தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டதோடு பல்வேறு அரசு உயரலுவலர்கள், காவல் துறை உயரலுவலர்களிடமும் விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இது தொடர்பாக அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதோடு, அவர் தலைமறைவாகியுள்ளதை அறிந்த காவல் துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.