ETV Bharat / state

3 ஆண்டுகளாக இருசக்கர வாகனத்தில் குடிநீர் விநியோகமா? மதுரையில் நடந்தது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 7:51 AM IST

Madurai water lorry issue: மதுரை மாநகரில் குடிநீர் விநியோகம் செய்யும் லாரியை இருசக்கர எண்ணில் பதிவு செய்து, மூன்று ஆண்டுகளாக மோசடி செய்து, லட்சக்கணக்கில் பண மோசடி செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோக லாரி மூலம் ஊழல்
மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோக லாரி மூலம் ஊழல்

மதுரை: வைகை அணையில் இருந்து தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர், மதுரை நகர மக்களுக்காக கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. அது தவிர கோச்சடை, மணலூர் வைகை ஆற்றுப்படுகைகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் மற்றும் இதர ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் நீர் பெறப்பட்டு, மதுரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னையைச் சார்ந்த காசிமாயன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களில் உள்ள தனியார் ஒப்பந்த லாரிகள் மற்றும் டிராக்டர் எண்ணிக்கை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்ட நிதி குறித்தும் கேள்வி எழுப்பியிருந்தார். அதில் பெறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது.

இதன்படி, மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளில் வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைக்காக, ஒப்பந்த அடிப்படையில் 34 லாரிகள் மற்றும் 33 டிராக்டா்கள் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் லாரிகளும், டிராக்டர்களும் மேற்கொள்ளும் நடை (ட்ரிப்பு) கணக்கில் கொண்டு பணம் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோக லாரி மூலம் ஊழல்
மதுரை மாநகராட்சியில் குடிநீர் விநியோக லாரி மூலம் ஊழல்

அதில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற நூதன ஊழல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. மதுரை மாநகராட்சியின் முதல் மண்டலத்தில் ஒப்பந்த அடிப்படையில் 8 தனியார் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், இருசக்கர வாகன பதிவு எண்ணை, லாரியின் பதிவு எண்ணாக மாநகராட்சியில் பதிவு செய்து, மூன்று ஆண்டுகளில் சுமார் 1 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், TN 10 K 1036 என்கிற பதிவெண் கொண்ட லாரியை, TN 58 AS 1036 என்கிற இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணில் பதிந்து, அதீக நடை சென்றதாக கணக்குக் காட்டி பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, அந்த பதிவெண் மாற்றப்பட்ட லாரிக்கும் 2020ஆம் ஆண்டு மொத்தம் 4,600 நடைக்கு 35 லட்சம் ரூபாயும், 2021ஆம் ஆண்டு 6,200 நடைக்கு 48 லட்சம் ரூபாயும், 2022ஆம் ஆண்டு 2,100 நடைக்கு 17 லட்சம் ரூபாயும் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒப்பந்த லாரிகள், நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 10 முறைதான் நடைக்குச் செல்ல இயலும். ஆனால், மேற்கண்ட ஊழலில் ஈடுபட்ட லாரி, கடந்த 2021ஆம் ஆண்டு மட்டும் 12 மாதங்களில் 6,200 நடை சென்றுள்ளதாக பதியப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதத்திற்கு 516 நடையும், நாள் ஒன்றுக்கு 17 முறை நடையும் சென்றுள்ளதாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மட்டும் மேற்கண்ட அந்த இருசக்கர பதிவெண் கொண்டு மோசடி செய்த லாரிக்கும், 47 லட்சம் ரூபாய் மாநகராட்சி தரப்பில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியாகி உள்ள இந்த தகவல்களால் அம்பலமான ஊழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் காணாமல் போன ஆபரணங்களை கண்டிபிடிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.