ETV Bharat / state

மண்டல தொழில் நுட்பக்கல்வி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.21 லட்சம் பறிமுதல்!

author img

By

Published : Nov 3, 2021, 9:53 PM IST

மண்டல தொழில் நுட்பக் கல்வி செயற்பொறியாளரிடம் வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் செய்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ 21 லட்சம் பறிமுதல்!
மண்டல தொழில்நுட்ப கல்வி செயற்பொறியாளரிடம் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை: ரூ 21 லட்சம் பறிமுதல்!

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, கடலூர், தர்மபுரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் உள்ள அரசு பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரிகளின் வேலூர் மண்டல தொழில் நுட்பக் கல்வி செயற்பொறியாளராக ஷோபனா(57) என்பவர் இருந்து வந்தார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அங்கு பணியாற்றி வருகிறார்.

ஆறு மாவட்டங்களில் உள்ள அரசுக் கல்லூரிகளின் கட்டடம் கட்ட ஒப்பந்தம் விடுதல், அதற்கான நிதியை ஒதுக்குதல் போன்றவை இவரது பணிகளாகும்.

பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர்

இந்நிலையில், இவர் லஞ்சம் பெறுவதாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினருக்குக் கிடைத்த ரகசியத்தகவலின் பேரில், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று(நவ 02) இரவு ஒன்பது முப்பது மணி அளவில் பின் தொடர்ந்தனர்.

செயற்பொறியாளர் சோபனா தொரப்பாடியில் இருந்து அரியூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தான் சென்ற அரசு காரை நிறுத்தியுள்ளார்.

சிக்கிய ரூ.5 லட்சம்

இவரைப் பின்தொடர்ந்து சென்ற வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர்(பொறுப்பு) கிருஷ்ணராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் ஷோபனா சென்ற அரசு காரை சோதனை செய்தனர். அப்போது, வாகனத்தில் உரிய ஆவணம் இல்லாமல் இருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் சி.முருகன் அளித்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று(நவ 03) அதிகாலை, தந்தைப் பெரியார் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஷோபனா தங்கியுள்ள குடியிருப்பை திடீர் சோதனை செய்தனர்.

செயற்பொறியாளர் அலுவலகம்
செயற்பொறியாளர் அலுவலகம்
அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாத 15 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 4 லட்சம் மதிப்புள்ள மூன்று காசோலைகள், 18 ஆவணங்களையும் வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூரில் சோதனை நிறைவடைந்த நிலையில், ஷோபனாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.