மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளான தை ஒன்றாம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பல்வேறு தடைகளை மீறி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நடக்கவிருப்பதால் பாதுகாப்புப் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் உதயகுமார், மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் பணிகளை ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி மாணிக்கம், "உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவின்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை சிறப்பாக நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் என அனைவரும் தங்களுடைய பங்கை சிறப்பாக ஆற்றியுள்ளனர். நாம் அனைவரும் இணைந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டில், எந்த ஒரு சிறு தவறும் ஏற்படாமல் சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயகுமார், "தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டை மிகச் சிறப்பாக நடத்திவருகிறது. அலங்காநல்லூரில் பங்குபெறும் சிறந்த விளையாட்டு வீரருக்கு ஒரு காரையும், சிறந்த காளைகளுக்கு ஒரு காரையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து வழங்குவார்கள்" என்றார்.