ETV Bharat / state

பனைபொருள்களில் கலப்படம்: உணவு பாதுகாப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Jan 5, 2021, 1:59 PM IST

பனைவெல்லம், பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டில் செய்யப்படும் கலப்படத்தைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Adulteration of Palms products : Food Safety Department Response Order
Adulteration of Palms products : Food Safety Department Response Order

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். பனை மரத்தின் ஒவ்வொரு பாகமும் பயன்படுவதோடு அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன.

பனங்கூழ், பனம்பழம், பனைவெல்லம், அதிலிருந்து தயாரிக்கப்படும் பனை கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணம் உள்ளவையாக உள்ளன.

உடன்குடி, வேம்பார் பகுதி பனை வெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் பலர் இதனை தவறாக பயன்படுத்தி சர்க்கரை பாகு, சர்க்கரை ஆகியவற்றோடு சில ரசாயனங்களைச் சேர்த்து பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற தோற்றத்தையும் வாசனையையும் ஏற்படுத்தி விற்பனை செய்கின்றனர்.

ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றை கலப்படம் செய்து பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிக்கவும் அதற்கு அனுமதி வழங்கவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

மேலும் சர்க்கரைப்பாகு, சர்க்கரை ஆகியவற்றில் கலப்படம் செய்து பனை வெல்லம் பனங்கற்கண்டு போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் சீனி, பனங்கூழ் ஆகியவற்றை கலந்து கருப்பட்டி தயாரிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதால் இதுபோன்ற கலப்படத்திற்கு வழிவகுக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்களின் அடிப்படையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பில் கலப்படம் செய்யப்படுவது உறுதியாகிறது. ஆகவே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை ஆணையர் இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.