ETV Bharat / state

அனுமதி பெறாமல் பேருந்து நிலையம்... ரூ.25 லட்சம் அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்!

author img

By

Published : Mar 24, 2023, 12:41 PM IST

உரிய அனுமதிகளைப் பெறாமல் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

karur fine
karur

கரூர்: உரிய அனுமதிகளைப் பெறாமல் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி சார்பில், கடந்த 2009ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி கரூர், திருமணிலையூர், சுக்கலியூர், தானிமலை ஆகியப் பகுதிகளில் பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதில், திருமணிலையூர் நீர் வழிப்பாதையை மறித்து பேருந்து நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து அதே பகுதியைச் சேர்ந்த தங்கவேல்ராஜ் என்பவர், தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தார். பேருந்து நிலையம் அமைப்பதற்காக விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாசனக் கால்வாய்களை மறித்து பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் 5 ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகள் முடிக்காவிட்டால், தானமாக நிலம் வழங்கியவர்களிடம் மீண்டும் அந்த நிலங்கள் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்தம் போடப்பட்டதையும் நிறைவேற்றவில்லை. இந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், அமராவதி நதியில் இருந்து 446 மீட்டர் தூரத்தில் தான் பேருந்து நிலையம் கட்டப்படுவதாகவும், பாசனக் கால்வாய்கள் மீது பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

ஆனால், தீர்ப்பாயம் அமைத்த கூட்டுக்குழு நேரில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், பேருந்து நிலைய கட்டுமானப் பகுதியின் வழியாக கால்வாய்கள் செல்வதாகவும், சட்டப்படி அரசிடம் உரிய அனுமதியைப் பெறாமல் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உரிய அனுமதிகளைப் பெறும் வரை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட தீர்ப்பாயம், இந்த கட்டுமான பணிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதி பெரும் வரை கட்டுமானப்பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும்
பணிகளை மேற்கொள்வதற்கு உரிய ஒப்புதல்களை பெறுவது அவசியம் எனத்தெரிந்தும், கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட கரூர் மாநகராட்சிக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பாயம், அத்தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க:சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கடும் எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.