ETV Bharat / state

கரூரில் தொடரும் சாதிய வன்கொடுமை: போலீஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஆதித்தமிழர் பேரவை குற்றச்சாட்டு!

author img

By

Published : Jun 21, 2023, 8:11 AM IST

கடவூர் அருகே செலுத்திய கடனுக்கு மேல் வட்டிப் பணம் கேட்டு, இளைஞரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

karur
கரூரில் தொடரும் சாதிய வன்கொடுமை

கடவூர் அருகே செலுத்திய கடனுக்கு மேல் வட்டி பணம் கேட்டு தாக்குதல்

கரூர்: சாதிய வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கரூர் சிந்தாமணிப்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட வீரனம்பட்டி பகுதியில் காளியம்மன் கோயிலுக்குள் பட்டியல் இனத்தவர்கள் கோயிலுக்குள் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம், க.பரமத்தி காவல் நிலைக்கு உட்பட்ட காரூடையாம்பாளையம் காலனியில் பட்டியல் இனத்தவர் 3 தலைமுறைகளாகப் பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்த விவகாரம் என அடுத்தடுத்து கரூர் மாவட்டத்தில் சாதிய வன்கொடுமைகள் மிகத் தீவிரமாகி வருகின்றன.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கரூர் மாவட்டம், கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட செம்பியானத்தம் ஊராட்சி குருணியூர் பகுதியில் வசிக்கும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குமரவேல் என்ற இளைஞர் செலுத்திய கடனுக்கு கூடுதல் தொகை கேட்டு தர மறுத்ததால், அடித்து உதைக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள பாலவிடுதி காவல் எல்லைக்குட்பட்ட குருணியூர் பகுதியில் வசிக்கும் குமரவேல் என்ற இளைஞர் திருமணமாகி, குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் அவரது உறவினர்களான ரமேஷ், பிச்சைமணி ஆகிய இருவருடன் சேர்ந்து குமரவேலு வீட்டின் முன்பு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, அவரது தந்தை பெற்ற 1.80 லட்சம் ரூபாய் கடனுக்கு இதுவரை கட்டிய 9 லட்சம் ரூபாய் தொகை வட்டி மட்டுமே, ஆகையால் அசல் தொகையை செலுத்து அல்லது புதிய பாண்டு பத்திரத்தில் கடன் பெற்றதாக கையொப்பமிடு என மிரட்டி உள்ளார்.

இதற்கு குமரவேல் மறுக்கவே, அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் முன்னிலையில் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கடுமையாக அண்ணாதுரையும் அவருடன் வந்த இருவரும் தாக்கியுள்ளனர். இதில் குமரவேலுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவிலான ரத்தம் வெளியேறியுள்ளது. மேலும் அவரை கீழே தள்ளி அடித்து உதைத்து கடுமையான சொற்களால் தொடர் தாக்குதல் நடத்தவே, நிலை குலைந்து போன குமரவேல் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

இன்னும் ஒரு மாத காலத்திற்குள், அசல் தொகை முழுவதையும் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் குடியிருக்கும் வீட்டை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி விடுவோம் என விரட்டிச் சென்றுள்ளனர். இதனிடையே மயங்கிய குமரவேலுவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்பொழுது சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை பாலவிடுதி காவல்துறை வழக்கு எதுவும் பதியவில்லை.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட குமரவேலுவின் சகோதரர் குழந்தைவேலு கூறுகையில், "கடவூர் அருகே உள்ள குருணியூர் பகுதியில் பிறந்து வளர்ந்து, தற்பொழுது கரூர் ராயனூரில் தங்கி டெய்லராக கரூரில் உள்ள டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். தனது தாய், தந்தை ஆகியோரை தனது சகோதரன் குமரவேல் பராமரித்து வருகிறார். தானும் குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் சென்று தனது தாய், தந்தை சகோதரன் ஆகியோரை பார்த்து வருவது வழக்கம்.

தனது தந்தை ராஜேந்திரன் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பகவுண்டரிடம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் குடும்பச் செலவுக்காக பெற்று மாதம் ரூ.5400 வீதம் என செலுத்தி வந்துள்ளார். இதுவரை மொத்தமாக ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் செலுத்தியுள்ளார். நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்ட கடன் என்பதால் தவறாமல் ஒவ்வொரு மாதமும் கூலி வேலை செய்து தனது தந்தை ரூ. 5400 செலுத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது தந்தை சிறுநீரக கோளாறு ஏற்பட்டு உடல்நிலை மோசமாகி படுத்த படுக்கையாகி விட்டார். இந்நிலையில் தனது தந்தை செலுத்த வேண்டிய மாதம் ரூ.5400 கடந்த 3 மாதங்களாக தன்னிடம் கேட்டு ஆண்டியப்பகவுண்டரின் மகன் அண்ணாதுரை தொந்தரவு செய்து வந்தார்.

இந்நிலையில் தான் வேலை நிமித்தமாக கரூர் வந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற அண்ணாதுரையும் அவரது உறவினர்களான ரமேஷ், பிச்சைமணி ஆகிய மூவரும் சரமாரியாக தாக்கியதில் நிலை குலைந்து தற்பொழுது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

கொடுத்த அசல் கடன் தொகைக்கு மேல் எனது தந்தை கடனை கட்டி வந்தது தனக்கு சமீபத்தில் தான் தெரியவந்தது. தனது தந்தையை ஏமாற்றி கொடுத்த கடன் தொகைக்கு மேல் அதிக அளவு பெற்றது மட்டும் இல்லாமல், தற்பொழுது மேலும் தொடர்ந்து எனது சகோதரரும் தானும் அதனை செலுத்த வேண்டும் எனக் கூறி தாக்கியுள்ளனர்.

எனவே, ஊருக்குள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் குடும்பம் அப்பகுதியில் வசிக்க அரசும் காவல் துறையும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக ஆதித்தமிழர் பேரவையின் கரூர் மாவட்டச் செயலாளர் பசுவை பாரதி கூறுகையில், "கடவூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீண்டாமை வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏழை எளிய கூலி வேலை செய்யும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கடன் வழங்கி அவர்களை பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக முன்னேற விடாமல் நசுக்கும் ஆதிக்க சமூகத்தினர், தற்பொழுது வன்முறையை கையில் எடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசும் இதனை வேடிக்கை பார்க்காமல் இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆதித்தமிழர் பேரவை சார்பில் கரூர் மாவட்டத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "திமுகவில் ஒவ்வொரு விக்கெட்டாக விழுகிறது" - நாராயணன் திருப்பதி சூசகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.