ETV Bharat / state

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: உறவினர்கள் எஸ்பி அலுவலகத்தில் புகார்

author img

By

Published : Oct 6, 2020, 3:41 PM IST

எஸ்பி அலுவலத்தில் புகார் மனு
எஸ்பி அலுவலத்தில் புகார் மனு

கன்னியாகுமரி: வரதட்சனை கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் உறவினர்கள், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வல்லங்குமரன் விளை பகுதியை சேர்ந்தவர் பேபி செல்வன். இவரது மகள் சுஜி (32). இவரை திக்கிலான்விளை பகுதியை சேர்ந்த சிவ ரஞ்சித் (34) என்ற மாற்றுத்திறனாளிக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.

திருமணத்தின்போது மாற்றுத்திறனாளி என்பதால் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறி சுஜியை திருமணம் செய்துள்ளார். எனினும் திருமணத்திற்குப் பின்பு சிவ ரஞ்சித்தும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து சுஜியிடம் அதிக வரதட்சணை வாங்கி வரும்படி கொடுமை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சுஜியை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவரை சமாதானம் செய்து ரூ. 50 ஆயிரம் பெண் வீட்டு சார்பாக கொடுத்து மீண்டும் கணவருடன் சேர்த்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றும் (அக்டோபர் 5) வரதட்சணை பணம் தொடர்பாக கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் விரக்தியடைந்த சுஜி, கணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பேபி செல்வன் தன் மகளை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக சுஜியின் தந்தை புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் கணவர் சிவரஞ்சித், மாமனார் செல்லதுரை, மாமியார் வசந்தா, உறவினர்கள் சிவரஞ்சனி, அனிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.