ETV Bharat / state

தமிழகத்தில் கடத்தப்பட்ட குழந்தை கேரளாவில் மீட்பு; குழந்தையைக் கடத்திய தம்பதி கைது

author img

By

Published : Jul 27, 2023, 6:40 PM IST

நாகர்கோவிலில் 6 மாத ஆண் குழந்தையைக் கடத்தி சென்ற தம்பதியை கொல்லம் ரயில் நிலையத்தில் வைத்து கைது செய்த போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி: நெல்லை மாவட்டம், வள்ளியூர் பூங்கா நகர், நரிக்குறவர் காலனி பகுதியைச் சேர்ந்தவர், முத்துராஜா. இவரது மனைவி ஜோதிகா. இவர்களுக்கு ஹரி என்ற 6 மாத ஆண் கைகுழந்தை உள்ளது. இவர்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி பேருந்து நிலையத்தில் பாசி மணிகள் விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரம் முடிந்தவுடன் இரவு வடசேரி பேருந்து நிலையத்தில் தங்குவது வழக்கம்.

இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு முத்துராஜா, அவரது மனைவி ஜோதிகா மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோர் சேர்ந்து மது அருந்தி விட்டு பேருந்து நிலையத்தில் தூங்கி விட்டனர். அப்போது நள்ளிரவில் ஜோதிகாவின் 6 மாத ஆண் குழந்தையை யாரோ தூக்கிச் சென்றுள்ளனர்.

அதிகாலையில் எழுந்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. பதறிப்போன தம்பதியர் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேருந்து நிலையம் முழுவதும் தேடிய பின்னரும் குழந்தை கிடைக்காததால் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வடசேரி போலீசார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த போது, சேலை அணிந்து அதன் மேல் சட்டை அணிந்து வந்த பெண் ஒருவர், குழந்தை ஹரியை தூக்கி செல்வது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. மேலும் இதில் தனிப்படை அமைத்து ரயில் நிலையம், பேருந்து நிலையம் எனப் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதனை அடுத்து, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் அப்பெண் ஏறிச் சென்ற சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கேரளா மாநில போலீசாருக்கும் தகவல் அளித்து இருந்தனர். இந்த நிலையில், நான்காவது நாளான இன்று (ஜூலை 27) கேரளா மாநிலம், கொல்லம் பகுதியில் உள்ள ரயில் நிலையம் அருகில் பெண் ஒருவர் 6 மாத குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருப்பதாக ரயில்வே போலீசார் கன்னியாகுமரி போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனிடையே அப்பெண்ணை ரயில்வே போலீசார் அவர்களது கட்டுப்பாட்டில் அமர்த்தியுள்ளனர். இதனை அடுத்து, கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீசார் கொல்லம் சென்ற நிலையில் அந்த பெண்ணையும் அவரது கணவரையும் கைது செய்து 6 மாத ஆண் குழந்தை ஹரியை, மீட்டு நாகர்கோவில் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த பெண்மணி கன்னியாகுமரி அடுத்த வட்டகோட்டை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சாந்தி என்பதும்; அவரும் அவரது கணவர் 55 வயதான நாராயணன் என்பதும் தெரியவந்தது. மேலும், குழந்தையைத் திருடி அதை வைத்து பிச்சை எடுக்க பயன்படுத்த எண்ணி கடத்தலில் ஈடுபட்டதாகத் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து, இந்த தம்பதியர் இதேபோல வேறு ஏதும் பகுதிகளில் குழந்தையைக் கடத்தி உள்ளனரா இவர்களுக்கும் வேறு ஏதும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்கின்ற கோணத்தில் போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாகர்கோவிலில் இன்று (ஜூலை 27) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் முன்னிலையில் போலீசார் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பாலி தீவில் விடுமுறையை கொண்டாடும் சமந்தா... குரங்குடன் எடுத்த செல்பி வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.