ETV Bharat / state

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம்.. பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 1:21 PM IST

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம் வாங்கிய  பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது

Bribe - Kancheepuram registration officials arrested: காஞ்சிபுரத்தில் போலியாக செய்யப்பட்ட பதிவை, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ரத்து செய்வதற்கு லஞ்சம் கேட்ட பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற லஞ்சம் வாங்கிய பத்திரப் பதிவுத்துறை ஊழியர்கள் இருவர் கைது

காஞ்சிபுரம்: சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி அருகே, ஒன்றரை சென்ட் அளவிலான பூர்வீக நிலம் உள்ளது. பத்மாவதியின் உடன் பிறந்த சகோதரரான பச்சையப்பன் என்பவர் போலி ஆவணங்களை தயார் செய்து, தன்னுடைய பெயருக்கு அந்த இடத்தைப் பதிவு செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த பத்மாவதியின் மருமகன் உலகநாதன் என்பவர், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கில் மேற்கண்ட போலி ஆவணங்களை ரத்து செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிகை பகுதியில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்குச் சென்ற உலகநாதன், பதிவாளரை சந்தித்து நீதிமன்ற உத்தரவினை அளித்தார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட போலி பத்திரப் பதிவை ரத்து செய்யக் கோரி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நீதிமன்ற உத்தரவு, காஞ்சிபுரம் அலுவலகத்தில் இருந்து வாலாஜாபாத் துணை பத்திரப்பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் போலி பத்திரப் பதிவு ரத்து செய்யப்படவில்லை. இதனால் உலகநாதன் மீண்டும் காஞ்சிபுரம் மாவட்ட பத்திரப்பதிவாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அங்கு பணிபுரியும் அலுவலக உதவியாளர் நவீன்குமார் என்பவரை சந்தித்த உலகநாதன் இதுகுறித்து கேட்டதாகத் தெரிகிறது. அதற்கு நவீன்குமார், 2 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அந்தப் பதிவை ரத்து செய்துத் தருவதாகக் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உலகநாதன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்று, பதிவாளர் அலுவலக ஊழியர் லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், முதல் கட்டமாக 1 லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும், வேலை முடிந்த பிறகு மீதி ரூ. 1 லட்சத்தைத் தருவதாகவும் கூறுமாறு உலகநாதனுக்கு அறிவுறுத்தி திட்டம் தீட்டினர்.

அதன்படி நேற்று (ஆகஸ்ட் 25) மாலை, ரசாயனம் கலந்த ரூபாய் நோட்டுகளை உலகநாதனிடம் கொடுத்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட நவீன்குமாரிடம் அதை கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனையடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்துக்குச் சென்ற உலகநாதன், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நவீன்குமாரிடம் கொடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் நவீன்குமாரோ, தன் கையால் பணத்தை வாங்காமல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ்பாபு என்பவரிடம் லஞ்சப் பணத்தை கொடுக்குமாறு கூறியுள்ளார். அதனால் உலகநாதன் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டரிடம் பணத்தைக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட சுரேஷ்பாபு அதனை எடுத்துச் சென்று நவீன்குமாரின் பைக்கில் வைத்துள்ளார்.

அப்போது அங்கு கண்காணிப்பில் இருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் சுரேஷ்பாபுவை கையும் களவுமாகப் பிடித்தனர். அதைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை செய்தபோது, அலுவலக உதவியாளர் நவீன்குமாரிடம் கொடுப்பதற்காக மேற்கண்ட பணத்தை வாங்கியதாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், அலுவலக உதவியாளர் நவீன்குமார் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் சுரேஷ்பாபு ஆகிய இருவரையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கே லஞ்சம் கேட்ட பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Madurai Train Fire Update : உத்தரபிரதேசம் - ராமேஸ்வரம் சுற்றுலா ரயில் தீ விபத்து - 9 பேர் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.